Published : 08 Oct 2021 08:39 PM
Last Updated : 08 Oct 2021 08:39 PM
ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்திடமே சென்றுள்ள நிலையில் இது ஒரு வரலாற்று தருணம் என டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனத்தை ரூ.18 ஆயிரம் கோடிக்கு டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் வாங்கியுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. கடந்த 1953-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை மத்திய அரசு நாட்டுடைமை ஆக்கியது. தற்போது கடும் நஷ்டத்தில் சிக்கி தவித்து வருகிறது. அதனை வாங்க ஆளில்லாமல் இருந்தது.
தற்போது மத்திய அரசு நிறுவனமானக செயல்படும் ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.
எனினும் கடன் சிக்கலால் அந்நிறுவனத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. மேலும் கரோனா பொதுமுடக்கக் காலத்தில் ஏற்பட்ட விமான சேவை பாதிப்பில் ஏர் இந்தியா நிறுவனத்தின் வருவாய் மேலும் சிக்கலுக்குள்ளானது.
கோவிட் தொற்று சூழலுக்கு பின்பு கடந்த ஏப்ரல் மாதம் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. ஏர் இந்தியாவை வாங்கும் நிறுவனம் ஏல விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது.
இதற்கு செப்டம்பர் 15-ம் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது. இதில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது.
அமித் ஷா தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு டாடா சன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகையை ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அதனை உடடியாக டாடா நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. இந்த தகவலை மத்திய அரசும் உறுதிப்படுத்தவில்லை.
இந்தநிலையில் டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலத்தில் வாங்கியுள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
ஏர் இந்தியாவை வாங்க தலாஸ் நிறுவனம் குறிப்பிட்ட மதிப்பு 18,000 கோடி ரூபாய் ஆகும். இதில் 15,300 கோடி ஏர் இந்தியாவின் கடனுக்கான பாகமாகும், மீதமுள்ளவை மத்திய அரசுக்கு செலுத்தப்படும் என்று விமானப் போக்குவரத்துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே கூறினார்.
ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்திடமே செல்கிறது. இதுகுறித்து டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் கூறுகையில் ‘‘இது ஒரு வரலாற்று தருணம், நாட்டின் கொடி தாங்கும் விமான நிறுவனத்தை எங்கள் குழு சொந்தமாக வைத்து இயக்குவது ஒரு அரிய பாக்கியமாக இருக்கும். ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் உலகத்தரம் வாய்ந்த விமான நிறுவனத்தை உருவாக்குவது எங்கள் முயற்சியாகும்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT