Published : 23 Aug 2021 04:13 PM
Last Updated : 23 Aug 2021 04:13 PM

ஹால்மார்க் முத்திரை ஏன்? எதற்கு?- 50 நாட்களில் ஒரு கோடி நகைகள் விற்பனை

புதுடெல்லி

ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை ஒரு கோடியே 2 லட்சம் எண்ணிக்கையில் ஹால்மார்க் முத்திரை பெறப்பட்டுள்ள நகைகள் விற்பனையாகியுள்ளன.

சர்வதேச வர்த்தக அமைப்பான டபிள்யூடிஓ, தங்க நகை ஏற்றுமதி செய்யும் நாடுகள் பிஐஎஸ் தரச்சான்றை கட்டாயமாக்கியுள்ளது. டபிள்யூடிஓ அமைப்பில் இடம்பெற்றுள்ள 164 உறுப்புநாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு ஜூன் 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி தங்க நகை வர்த்தகத்தில் முறைகேடுகளை தடுப்பதற்கு மூன்று கிரேடுகளில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்படுகிறது.

அத்துடன் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

இதன்படி 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் உள்ளிட்ட மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகைகள் விற்பனை செய்யப்பட வேண்டும்.

இதற்கு முன்பு 10 கிரேடுகளில் தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இது தற்போது மூன்று கிரேடுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளும் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை பெற்றதாக இருக்க வேண்டும்.

அதேபோல இந்திய தர நிர்ணய அமைப்பு (பிஐஎஸ்) சான்றான ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இடம்பெற வேண்டும் .

ஹால்மார்க் முத்திரை அளிப்பதற்கு 234 மாவட்ட மையங்கள் உள்ளன. ஏறக்குறைய 28,849 வர்த்தகர்கள் பிஐஎஸ் பதிவு பெற்றுள்ளனர்.

மாவட்டங்களில் உள்ள தங்க நகை வர்த்தகர்கள் அனைவரும் ஹால் மார்க் மையங்களில் பதிவு செய்ய வேண்டும்.

இதை மீறுவோர் மீது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது அவரிடம் உள்ள பதிவு செய்யப்படாத தங்கநகைகளின் மதிப்பில் 5 மடங்கு அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

இந்தியாவில் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை ஒரு கோடியே 2 லட்சம் எண்ணிக்கையில் ஹால்மார்க் முத்திரை பதியப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் ஹால்மார்க் முத்திரை பெறுவதற்காக விண்ணப்பித்த நகைகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 17 லட்சமாகவும் உள்ளது.

ஹால்மார்க் முத்திரை பெறுவதற்காக நகைகளை அனுப்பிய விற்பனையாளர்களின் எண்ணிக்கை ஜூலை 1 முதல் 15-ஆம் தேதி வரை 5145 ஆக இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 1 முதல் 15-ஆம் தேதி வரையிலான காலத்தில் இந்த எண்ணிக்கை 14,349 ஆக அதிகரித்ததாக இந்திய தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x