Published : 21 Aug 2021 02:29 PM
Last Updated : 21 Aug 2021 02:29 PM

ஜூன் மாதத்தில் 12.83 லட்சம் சந்தாதாரர்கள்; இபிஎப்ஓ தகவல்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎப்ஓவில் ஜூன் மாதத்தில் 12.83 லட்சம் சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றுக்கு பிறகு அதிகமான தொழிலாளர்கள் இணைந்துள்ளதாக இபிஎப்ஓ தெரிவித்துள்ளது.

நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின், தற்காலிக தரவு விவரங்களை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி வெளியிட்டது. இதில் கடந்த ஜூன் மாதம், 12.83 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கரோனா தொற்றின் 2வது தாக்கம் கடந்த ஜூன் மாதம் குறைந்தது.

இது தொழிலாளர்கள் எண்ணிக்கை மிக அதிகளவில் அதிகரிக்க வழிவகுத்துள்ளது. கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில், நிகர சந்தாதாரர்கள் எண்ணிக்கையில் 5.09 லட்சம் பேர் அதிகரித்துள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் இணைந்த சந்தாதாரர்கள் 12.83 லட்சம் பேரில், 8.11 லட்சம் பேர், இபிஎப்-ன் சமூக பாதுகாப்பு திட்டத்தில் இணைந்த புதிய உறுப்பினர்கள். அதே மாதத்தில் 4.73 லட்சம் சந்தாதாரர்கள் பணிமாற்றம் காரணமாக வெளியேறி இபிஎப்ஓ அமைப்பில் மீண்டும் இணைந்துள்ளனர்.

பெரும்பாலான சந்தாதாரர்கள், இபிஎப்ஓ அமைப்பில் தொடர்ந்து இருக்க விரும்புவதை இது காட்டுகிறது. இவர்களின் பழைய பி.எப் கணக்கு நிதிகள், புதிய நிறுவனத்தின் பி.எப் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளன.

மாநில வாரியாக ஒப்பிடுகையில் மகாராஷ்டிரா, ஹரியாணா, குஜராத், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தொழிலாளர்கள் சேர்ப்பில் இன்னும் முன்னணியில் உள்ளன. இந்த மாநிலங்களில் மட்டும் சுமார் 7.78 லட்சம் சந்தாதாரர்கள் கடந்த ஜூன் மாதத்தில் சேர்ந்துள்ளனர். இது கூடுதலாக சேர்ந்த, அனைத்து வயது பிரிவு மொத்த நிகர சந்தாதாரர்களில் 60.61 சதவீதம் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x