Published : 27 Feb 2016 10:33 AM
Last Updated : 27 Feb 2016 10:33 AM

அடுத்த நிதி ஆண்டில் 7 முதல் 7.75% வளர்ச்சி இருக்கும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

அடுத்த நிதி ஆண்டில் (2016-17) நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 7 சதவீதம் முதல் 7.75 சதவீத அளவுக்கு இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்ன தாக 7 முதல் 7.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

பொருளாதார ஆய்வறிக்கையை நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்தார். இந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது

சீர்த்திருத்த நடவடிக்கைகளை தொடரும்பட்சத்தில் அடுத்த சில ஆண்டுகளில் 8 சதவீத வளர்ச்சிக்கு மேல் அடைய முடியும். அதேபோல நடப்பு நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை இலக்கான 3.9 சதவீதத்தை அடைய முடியும். ஆனால் அடுத்த நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை இலக்கை அடைவது கடினமாகும்.

சர்வதேச அளவில் ஏற்ற இறக்கங்கள் நிலவும் போது இந்தியா நிலைத்தன்மை உள்ள நாடாக இருக்கிறது. அதனால் இங்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

இப்போதைக்கு வெளிநாடு களில் தேவை குறைவு என்ற சூழ்நிலை உள்ளது. அதனால் உள்நாட்டு தேவையை உயர்த்த வேண்டியது அவசியமாகும். ஜிஎஸ்டி அமலாவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது அமலா கும் பட்சத்தில் இந்திய வரி அமைப்பில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். அதேபோல வரி செலுத்து பவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

8 முதல் 10 சதவீத வளர்ச்சி என்பது வெளியேற முடியாத சக்கரவியூகம் அல்ல. சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் கவனம் செலுத்தும் போது சக்கர வியூகத்தில் இருந்து வெளியேறலாம்.

இந்தியாவின் பேரியல் பொரு ளாதாரம் சிறப்பாக இருப்பதினால், உலகில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சிறந்த சந்தை இந்தியாவாக இருக்கும். சர்வதேச அளவில் பங்குச்சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுடன் ஒப்பிடும் போது இந்தியா பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கம் குறைவானதாக இருக் கும். கடந்த டிசம்பர் 2014 முதல் இந்தியாவின் ஏற்றுமதி எதிர்மறையாக இருக்கிறது. அடுத்த நிதி ஆண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும்.

இந்தியாவில் 19,400 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த நிறுவனங்களில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் இன்னும் இந்தியாவில் கிடைக்கவில்லை. இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலமாக மட்டும் கடந்த வருடம் 80,000 முதல் 85,000 வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளன.

இந்தியாவின் வரி ஜிடிபி விகிதம் 16.6 சதவீதமாக இருக்கிறது.ஒப்பீட்டளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது 5.4 சதவீதம் இது குறைவாகும். இந்த விகிதத்தை உயர்த்த வேண்டும்.

ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்தும்பட்சத்தில் பணவீக்கம் உயரலாம் என்ற கருத்து இருக்கிறது. ஆனால் இதன் காரணமாக பணவீக்கம் உயர வாய்ப்பில்லை.

மேலும் சர்வதேச அளவில் முக்கிய கமாடிட்டிகளின் விலை குறைந்துள்ளதால் அடுத்த நிதி ஆண்டில் பணவீக்கம் உயர வாய்ப்பில்லை. 4.5 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை பணவீக்கம் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகள் வந்திருக்கிறது. 2015-ம் ஆண்டி லிருந்து 1,000 கோடி டாலர் முதலீடு வந்திருக்கிறது. நாட்டில் உள்ள 1.55 லட்சம் தபால் நிலையங்களும் 2017-ம் ஆண்டுக்குள் கணினிமயமாக்கப்படும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



எல்.இ.டி. பல்ப் ரூ.45,500 கோடி சேமிக்கலாம்

தேசிய எல்இடி திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 77 கோடி பல்புகள் மற்றும் 3.5 கோடி தெருவிளக்குகளை எல்.இ.டியாக மாற்றும் (2019-ம் ஆண்டுக்குள்) பட்சத்தில் ரூ45,500 கோடியை மத்திய அரசு சேமிக்க முடியும். தவிர 21,500 மெகாவாட் மின்சாரத்தின் தேவையும் குறையும். தவிர 8.5 கோடி டன் கரியமில வாயு வெளியேற்றத்தையும் தடுக்க முடியும். இந்த திட்டம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி தொடங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x