

2020 ஆம் ஆண்டுக்குள் 13 கோடி இந்தியர்கள் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவார்கள் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. அழகு மற்றும் ஆரோக்கிய பொருட்கள் சந்தை 60 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்றும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
பெய்ன் அண்ட் கம்பெனி மற்றும் கூகுள் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன. ஆன்லைன் மூலம் நடக்கும் விற்பனையில் மூன்றில் இரண்டு பங்கு விற்பனை அழகு மற்றும் ஆரோக்கிய சந்தை சார்ந்த பொருளாக இருக்கும் என்றும், ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டுக் குள் 13 கோடியாக உயரும் என்றும் ஆய்வு கூறியுள்ளது.
மொத்த விற்பனையில் 20 சதவீதம்வரை இணையதளம் வழியாக விற்பனையாகும். 2020 ஆம் ஆண்டில் இணைய தளம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 65 கோடியை தொடும் என்று கணிக்கப்பட் டுள்ளது.
இதில் 20 கோடிக்கும் அதிகமாக பெண் பயனாளிகளாக இருப்பார்கள் என்றும், 25 கோடிக்கும் அதிகமானவர்கள் கிராமப்புற பயனாளிகளாக இருப்பார்கள் என்றும் கணிக்கப்படுள்ளது.
அதிக அளவிலான நுகர்வில், அழகு சாதனங்கள் மற்றும் ஆரோக்கிய பொருட்கள் துறை இடம் பிடிக்கும். மின்னணு தொழில்நுட்பம் இல்லாத வீட்டு உபயோக பொருட்களைவிட மின்னணு தொழில்நுட்பத்திலான வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை 20 மடங்கு அதிகமாக இருக்கும்.
வளர்ந்து வரும் பொருட்கள் துறையில், மின்னணு தொழில்நுட்பத்திலான வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது என்று கூகுள் இந்தியா நிறுவனத்தின் தொழில்துறை இயக்குநர் விகாஸ் அக்னிஹோத்ரி குறிப்பிட்டுள்ளார்.
ஷாப்பிங் தொடர்பான தேடல்களில் அழகு மற்றும் ஆரோக்கிய பொருட்கள் குறித்து தேடுவது அதிகரித்துள்ளது. கூகுள் தேடல்களில் இதற்கடுத்து ஆடைகள், மொபைல் போன்கள் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிட்டார்.
பெருவாரியான எப்எம்சிஜி நிறுவனங்கள் இந்த துறையில், இணையதளம் உருவாக்கும் தாக்கத்தை குறைத்து மதிப்பிட்டு வருகின்றன. இந்த துறையின் வாடிக்கையாளர் பிரிவு ஆன்லைன் விற்பனை தளங்கள் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதிக நேரத்தை இணைய தளத்துக்கு ஒதுக்குகின்றனர். எப்எம்சிஜி நிறுவனங்கள் இதற்கு ஏற்றவாறு தங்களை டிஜிட்டல் மாற்றங்களுக்கு தயார்படுத்திக் கொள்வது தேவையாக உள்ளது என்றும் அந்த ஆய்வு கூறியுள்ளது.