Published : 29 Jun 2021 08:46 AM
Last Updated : 29 Jun 2021 08:46 AM

குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு திட்டங்கள் சென்றடைய  பொது சேவை மையம்: நிதின் கட்கரி

புதுடெல்லி

தற்சார்பு இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியான பல்வேறு முன்முயற்சிகளை அமல்படுத்துவதில் அனைத்து கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினத்தை முன்னிட்டு ‘இந்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், பொருளாதார வளர்ச்சிக்கான உந்துசக்திகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற காணொலி மாநாட்டில் பேசிய அவர், தற்சார்பு இந்தியாவை உருவாக்க, வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் தொழில்துறை, தோல் மற்றும் பழங்குடி தொழில்துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தொழில்நுட்பப் பயன்பாட்டின் அவசியத்தை வலியுறுத்திய அமைச்சர், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தரமான வளர்ச்சி ஆகியவை தொழில்துறையின் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்று தெரிவித்தார்.

இந்த சிறப்பான தருணத்தில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அரசு திட்டங்களின் ஏராளமான பயன்கள் பல்வேறு பகுதிகளுக்கு முறையாக சென்றடைவதை அதிகரிக்கும் நோக்கத்தில், பொதுவான சேவை மையத் தளத்துடன் கூடிய உதயம் முன்பதிவு தளத்தின் ஒருங்கிணைந்த சேவைகளையும் நிதின் கட்காரி அறிமுகப்படுத்தினார்.

மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு, பால் மற்றும் மீன்வள இணை அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி பேசுகையில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உண்மையான திறமையை வெளிப்படுத்தவும், உற்பத்தியின் போட்டித் தன்மையை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களுக்கும், முயற்சிகளுக்கும் அமைச்சகம் ஆதரவளித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x