Published : 22 Jun 2021 04:32 PM
Last Updated : 22 Jun 2021 04:32 PM

வேலை குறித்து ஆண்களைவிட அதிகம் கவலைப்படும் பெண்கள்: கரோனா காலத்தில் அதிகரிப்பு

வேலைக்குச் செல்லும் ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள், வேலை கிடைப்பது குறித்து இரு மடங்கு அதிகம் கவலைப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்த வித்தியாசம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து லிங்க்டுஇன் பணியாளர் நம்பிக்கை அட்டவணையில் கூறப்பட்டுள்ளதாவது:

’’பெண் தொழில் வல்லுநர்களின் தனிப்பட்ட தன்னம்பிக்கை விகிதம் மார்ச்சில் +57 ஆக இருந்த நிலையில், தற்போது +49 ஆகச் சரிந்துள்ளது. இதுவே ஆண் தொழில் வல்லுநர்களின் தனிப்பட்ட தன்னம்பிக்கை விகிதம் மார்ச்சில் +58 ஆக இருந்த நிலையில், ஜூன் மாதம் +56 ஆக மட்டுமே குறைந்துள்ளது.

வேலை கிடைப்பது, வேலைக்கான மக்கள் தொடர்புகள், வேலை தேடுவதற்கான நேரம் ஆகியவை குறித்து ஏற்கெனவே பணியாற்றி வரும் இந்தியப் பெண்கள், ஆண்களைவிட இரு மடங்கு அதிகம் கவலைப்படுகின்றனர். நான்கில் ஒரு பெண் தொழில் வல்லுநர் (23 சதவீதம்), அதிகரித்து வரும் செலவுகள் அல்லது கடன் குறித்து அதிகம் கவலை கொள்கிறார். இதுவே ஆண்கள் மத்தியில் 10-ல் ஒருவர் மட்டுமே கவலைப்படுகிறார். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்த வித்தியாசம் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் ஒட்டுமொத்தப் பணியாளர்களின் நம்பிக்கை கடந்த மார்ச்சில் +58 ஆக இருந்த நிலையில் ஜூன் முதல் வாரத்தில் +54 ஆகி உள்ளது. இந்த சரிவு பொழுதுபோக்கு, வடிவமைப்பு, ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு போன்ற படைப்புத் துறை ஊழியர்கள், தங்களின் நிறுவனங்களின் எதிர்காலம் குறித்துக் கவலைப்படுவதைக் காட்டுகிறது.

இதற்கிடையே, வேலைக்குச் செல்லும் நடுத்தர வயதினர், வயது முதிர்ந்தோரைவிட இளைஞர்கள் வேலையிழப்பால் அதிகம் பாதிக்கப்பட்டு, எதிர்காலம் குறித்த கவலையில் உள்ளனர். இன்றைய தலைமுறையினரில் 30 சதவீதம் பேரும், மில்லினியம் தலைமுறையில் 26 சதவீதம் பேரும், அதற்கு முந்தைய தலைமுறையில் 18 சதவீதம் பேரும் வேலை இல்லாமல் அவதிப்படுகின்றனர்’’.

இவ்வாறு அந்த அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x