Published : 07 May 2021 08:42 AM
Last Updated : 07 May 2021 08:42 AM

17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் ரூ.9,871 கோடி விநியோகம் : தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி

17 மாநிலங்களுக்கு 2021-22ம் ஆண்டுக்கான பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை(பிடிஆர்டி) மானியத்தின் 2வது மாதத் தவணைத் தொகை ரூ.9,871 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை இன்று வழங்கியது. இதில் தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி கிடைத்துள்ளது.

இந்த 2வது தவணை விநியோகத்துடன், மொத்தம் ரூ.19,742 கோடி, இந்த நிதியாண்டில் முதல் 2 மாதத்தில், பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் சாசனத்தில் 275வது பிரிவின் படி இந்த பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. பகிர்வுக்குப்பின் மாநிலங்களின் வருவாய் கணக்கில் உள்ள இடைவெளியை போக்க, நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி இந்த மானியங்கள் மாதத் தவணைகளாக வழங்கப்படுகின்றன.

17 மாநிலங்களுக்கு பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை வழங்க 15வது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்கள்: ஆந்திர பிரதேசம், அசாம், ஹரியாணா, ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்திரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம்.

இந்த மானியத்தை பெற மாநிலங்களுக்கான தகுதி, மானியத்தின் அளவு ஆகியவை, மாநிலத்தின் வருவாய் மற்றும் செலவினங்களின் மதிப்பீடுகளுக்கு இடையே உள்ள இடைவெளி அடிப்படையில் நிதி ஆணையத்தால் முடிவு செய்யப்பட்டது.

2021-22ம் ஆண்டுக்கான மதிப்பீட்டு பகிர்வும் நிதி ஆணையத்தால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

2021-22ம் நிதியாண்டில் 17 மாநிலங்களுக்கு பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியமாக மொத்தம் ரூ.1,18,454 கோடி வழங்க வேண்டும் என 15வது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்த மானியம் மாநிலங்களுக்கு 12 மாத தவணைகளாக வழங்கப்படுகிறது.

தமிழகத்துக்கு 2வது தவணையாக ரூ.183.67 கோடியும், ஏப்ரல் மற்றும் மே மாதத்துடன் சேர்த்து மொத்தம் ரூ.367.34 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x