சிறந்த சர்வதேச நிறுவனங்களில் 4-வது நிறுவனமாக விஏ டெக் வாபாக் தேர்வு

சிறந்த சர்வதேச நிறுவனங்களில் 4-வது நிறுவனமாக விஏ டெக் வாபாக் தேர்வு
Updated on
1 min read

நீர் சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ள விஏ டெக் வாபாக் நிறுவனம் சர்வதேச அளவில் மிகச்சிறந்த நிறுவனங்களில் 4-வது நிறுவனமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புத்தாக்க முறையில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத நீர் சுத்திகரிப்புத் தீர்வுகளை அளிப்பது மற்றும் அதைச் செயல்படுத்துவதில் வாபாக் நிறுவனம் ஒன்றாகத் திகழ்கிறது. சமீபத்தில் இந்நிறுவனம் கங்கை நீரைச் சுத்திகரிக்கும் திட்டப் பணியில் ஒரு பகுதியை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தத்தைப்பெற்றுள்ளது.

உலக அளவில் இந்நிறுவனம் 7 கோடி மக்களுக்குக் குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிக்கும் பணியை மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறது.

சர்வதேச அளவில் இத்தகைய குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் கழிவுநீர் மேலாண்மையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் 50 சிறந்த நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் நான்காவது நிறுவனமாக விஏ டெக் வாபாக் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் 2017-ம் ஆண்டு வாபாக் 10 வது இடத்தில் இருந்தது. 2019-ம் ஆண்டில் 6-வது இடத்துக்கு முன்னேறியது. தற்போது 2021-ம் ஆண்டில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்நிறுவனம் தினசரி 2.6 கோடி கன மீட்டர் குடிநீரை மக்களுக்கு வழங்குகிறது. இதேபோல 3 கோடி கன மீட்டர் கழிவுநீரைச் சுத்திகரித்து, சுகாதாரமான சூழல் நிலவ வழி செய்கிறது.

20 லட்சம் கன மீட்டர் ஆலைக் கழிவுகளைச் சுத்திகரிக்கிறது. இதேபோல 25 லட்சம் கன அடி கழிவு நீரை மறு உபயோகத்துக்குச் (குடிநீர் அல்ல) சுத்திகரித்து வழங்குகிறது. இந்நிறுவனம் ரூ.11,050 கோடிக்கு திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான ஆர்டரைக் கைவசம் வைத்துள்ளதாக நிறுவனத்தின் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைமை மேலாளர் டி.வி. கோபால் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in