Published : 24 Dec 2015 10:11 AM
Last Updated : 24 Dec 2015 10:11 AM
அனில் அம்பானி நடத்தி வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், ஏர்செல் மற்றும் எம்டிஎஸ் நிறுவனங்களை இணைக்க பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.
கடந்த நவம்பரில் இருந்து எம்டிஎஸ் நிறுவனத்தின் பேச்சு வார்த்தை தொடங்கி இருக்கிறது. அதேபோல ஏர்செல் நிறுவனத்தின் நிறுவனர்களுடன் 90 நாள் ஒப்பந்தம் ஒன்றையும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் செய்திருக்கிறது. இந்த ஒப்பந்தங்களில் எந்தவிதமான பந்தமும் இல்லை. இந்த பேச்சுவார்த்தைகள் இணைப்பில் முடியவேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆர்காம் தெரிவித்திருக்கிறது.
ஆனால் மூன்று நிறுவனங் களுக்குமே இது சிறந்த வாய்ப்பு என்று இந்த துறை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். கடந்த சில வருடங்களாகவே இதுபோன்ற இணைப்பு நடவடிக்கைகள் இருக்கும் என்று சந்தை எதிர்பார்த்தது. இதேபோல இன்னும் சில இணைப்பு நடவடிக்கைகளை 2016-ம் ஆண்டு எதிர்பார்க்கலாம் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த மூன்று நிறுவனங்களும் இணையும் பட்சத்தில், புதிய நிறுவனத்தின் கீழ் 20 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். இது வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை விட அதிகமாகும்.
ரிலையன்ஸ் கம்யூனி கேஷனுக்கு சொந்தமான செல்போன் கோபுரங்கள் மற்றும் கண்ணாடி இழை (ஆப்டிகல் பைபர்) உள்கட்டமைப்பு ஆகியவற்றை தவிர மற்றவை இந்த இணைப்பில் இருக்கும். டிசம்பர் 4-ம் தேதி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தனக்குச் சொந்தமான 30,000 கோடி மதிப்புள்ள செல்போன் கோபுரங்களை பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான டில்மான் குளோபல் ஹோல்டிங்க்ஸ் மற்றும் டிபிஜி ஆசியா ஆகிய நிறுவனங்களுக்கு விற்பதற்கு எந்தவித பிணைப்பு இல்லாத ஒப்பந்தத்தை செய்து கொண்டது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ஏர்செல் மற்றும் எம்டிஎஸ் ஆகியவை இணைந்து தனியான நிறுவனம் தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT