Published : 12 Nov 2015 11:21 AM
Last Updated : 12 Nov 2015 11:21 AM
முதலீட்டாளர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற இண்டிகோ ஐபிஓ செவ்வாய் கிழமை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. முதல் நாள் வர்த்தகத்தில் இந்த பங்கு 15 சதவீதம் வரை உயர்ந்தது. 765 ரூபாய் என்ற வெளியீட்டு விலையுடன் வர்த்தகத்தை தொடங்கிய இந்த பங்கு 14.7 சதவீதம் உயர்ந்து 878 ரூபாயில் முதல் நாள் வர்த்தகத்தை முடித்தது. வர்த்தகத்தின் இடையே 17.3 சதவீதம் கூட உயர்ந்தது.
முதல் நாள் வர்த்தகத்தில் 50.66 லட்சம் பங்கு பரிவர்த்தனை நடந்தது. முதல் நாள் வர்த்தகத்தின் முடிவில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 31,655 கோடி ரூபாயாக இருந்தது. உள்நாட்டு விமான நிறுவனங்களின் அதிகபட்ச சந்தை மதிப்பை உடைய நிறுவனமாக இது மாறி இருக்கிறது.
கடந்த மூன்று வருடங்களில் வெளியான மிகப்பெரிய ஐபிஓ இதுவாகும். இந்த நிறுவன பங்குகளுக்கு 6.15 மடங்குக்கு விண்ணப்பங்கள் வந்தன. இந்த நிறுவனம் 3008 கோடி ரூபாய் நிதி திரட்டியது.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் காபி டே பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஆனால் பட்டியலிடப்பட்ட விலையை விட முதல் நாள் வர்த்தகத்தில் குறைவாக வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அதே சமயத்தில் எங்களுக்கு கூடுதல் பொறுப்புகளையும் இந்த வெற்றி கொடுத்துள்ளது. எங்களுடைய எதிர்பார்ப்புகளையும் தாண்டி ஐபிஓ வெற்றி அடைந்துள்ளது என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதித்யா கோஷ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT