ஒரே வாரத்தில் ஆர்காம் பங்குகள் 14% சரிவு

ஒரே வாரத்தில் ஆர்காம் பங்குகள் 14% சரிவு
Updated on
1 min read

அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன பங்குகள் ஒரே வாரத்தில் 14 சதவீத அளவுக்குச் சரிந்துள்ளன. இதனால் சந்தையில் ஏற்பட்ட நஷ்டம் ரூ. 2,775 கோடியாகும். கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் பங்கு விலை 7 சதவீதம் சரிந்து ரூ. 66 என்ற அளவில் வர்த்தகமானது.

மொத்தம் நான்கு வர்த்தக தினங்களில் இந்த அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷியாவைச் சேர்ந்த சிஸ்டமா நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைவதாக அறிவித்தது. இதற்குப் பதிலாக ஆர்காம் நிறுவனத்தில் 10 சதவீத பங்குகளை சிஸ்டமா நிறுவனம் வைத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் சரியத் தொடங்கின.

முந்தைய காலாண்டைக் காட்டிலும் செப்டம்பர் காலாண்டில் நிறுவன வருமானம் 3 சதவீதம் சரிந்ததும் வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும் அலைக்கற்றைக்கு இந்நிறுவனம் அளிக்க வேண்டிய பாக்கித் தொகை ரூ. 3,200 கோடியுடன் சேர்த்து மொத்த நிலுவை ரூ. 43,100 கோடியாக உயர்ந்துள்ளது. செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தவிர்த்து நிகர கடன் ரூ. 3,200 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in