Published : 27 Jun 2014 10:14 AM
Last Updated : 27 Jun 2014 10:14 AM
இந்தியாவில் தொழில் பூங்கா அமைக்க சீனாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்புதலுக்கு கொள்கையளவில் ஒப்பந்தத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஐந்துநாள் பயணமாக சீனா செல்ல உள்ளார். அதற்கு முன்பாக இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசியான் நாடுகளில் சீனா தொழில்பூங்காக்களை அமைத்துள்ளது. அந்த வரிசையில் கம்போடியா, இந்தோனேசியா, வியத்நாம் ஆகிய நாடுகளில் தொழில் பூங்காக்களை சீனா அமைத்துள்ளது.
இதேபோன்ற தொழில் பூங்காவை இந்தியாவிலும் அமைப்பதில் சீனா தீவிரமாக உள்ளது. இதுபோன்ற பூங்கா அமைப்பதற்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இது குறித்த முழு விவரம் வெளியிடப்படும் என்று சட்டம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்துக்குப் பிறகு இந்த விவரம் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
ஹமீது அன்சாரியுடன் மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமனும் செல்கிறார்.
இந்த பயணத்தின்போது சீன வர்த்தக அமைச்சர் காவ் ஹுசெங்குடன் நிர்மலா சீதாராமன் பேச்சு நடத்துவார். இருதரப்பு உறவு மற்றும் முதலீடு குறித்து இருவரும் விவாதிப்பர் எனத் தெரிகிறது.
இரு நாடுகளிடையிலான வர்த்தகம் 2011-ம் ஆண்டின் 7,500 கோடி டாலரிலிருந்து 6,500 கோடி டாலராக கடந்த ஆண்டு குறைந்துவிட்டது. 2015-ம் ஆண்டு இரு நாடுகளிடையிலான வர்த்தகம் 10,000 கோடி டாலரை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT