Published : 18 Mar 2021 05:11 PM
Last Updated : 18 Mar 2021 05:11 PM

சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இசிஎல்ஜிஎஸ் திட்டத்தில் ரூ.23 ஆயிரம் கோடி கடன்; ஹெச்டிஎப்சி வங்கி தகவல்

கரோனா தொற்றுக் காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்த அவசர கால கடன் உதவி (இசிஎல்ஜிஎஸ்) திட்டத்தின்கீழ் ரூ.23 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என, ஹெச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது.

வங்கியின் வர்த்தகப் பிரிவு மூத்த செயல் துணைத் தலைவர் சுமந்த் ராம்பால் இது தொடர்பாக காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

"நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு கணிசமாக உள்ளது. இந்தியாவில் 6 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உள்ளன. ஆனால், இவற்றில் முறைசார்ந்த வகையில் வங்கிகளில் கடன் பெறுபவை 1 கோடி நிறுவனங்களே. மற்ற நிறுவனங்களை முறை சார்ந்த வகையில் இணைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா ஊரடங்கு காலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இவற்றை மீட்டெடுக்க மத்திய அரசு கொண்டு வந்த கடன் உத்தரவாதத் திட்டத்தின்கீழ் ஹெச்டிஎப்சி வங்கி டிசம்பர் 31, 2020 வரையான காலத்தில் ரூ. 23 ஆயிரம் கோடியைக் கடனாக வழங்கியுள்ளது. இதன் மூலம் இத்துறைக்கான கடன் வழங்கலில் 30 சதவீத வளர்ச்சியை வங்கி எட்டியுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் மொத்தம் 720 மாவட்டங்களில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 650 மாவட்டங்களில் ஹெச்டிஎப்சி வங்கி செயல்படுகிறது. இதில், 550 மாவட்டங்களில் உள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான கடன் உதவிகளை வங்கி மேற்கொண்டு வருகிறது.

இதன் மூலம் நாட்டிலேயே இத்துறைக்குக் கடன் அளிக்கும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்த இடத்தில் தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி உள்ளது. வங்கியில் 30 லட்சம் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கணக்கு வைத்து தேவையான உதவிகளைப் பெற்று வருகின்றன.

இத்துறைக்குக் கடன் வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளையும் வங்கி அளிக்கிறது. இதன் காரணமாக, இத்துறையின் வாராக் கடன் அளவு மிகக் குறைவாக உள்ளது.

வரும் காலங்களில் மேலும் அதிக அளவில் அதிக எண்ணிக்கையிலான சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது".

இவ்வாறு சுமந்த் ராம்பால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x