Published : 27 Feb 2021 03:16 AM
Last Updated : 27 Feb 2021 03:16 AM

பங்குச் சந்தைகள் வீழ்ச்சி எதிரொலி: சென்செக்ஸ் 1900 புள்ளி சரிவு

சர்வதேச கடன் பத்திர சந்தைகளில் திடீர் விற்பனை அதிகரித்ததால் பங்குச் சந்தைகள் கடும் இறக்கத்தைச் சந்தித்துவருகின்றன. இந்தியப் பங்குச் சந்தைகளிலும் இதன் எதிரொலி காணப்பட்டது. சென்செக்ஸ் 3.8 சதவீதமும் நிஃப்டி 3.76 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.

கடந்த சில நாட்களாகவே இந்தியப் பங்குச் சந்தைகள் இறக்கம் கண்டுவந்த நிலையில் நேற்று சர்வதேச பங்குச் சந்தைகள் அனைத்தும் சரிவைச் சந்தித்ததால் பதட்டத்தில் முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை விற்று வெளியேறத் தொடங்கினர்.

இதனால் நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,939 புள்ளிகள் சரிந்து 49,099 என்ற நிலைக்கும், நிஃப்டி 568 புள்ளிகள் சரிந்து 14,529 என்ற நிலைக்கும் இறங்கியது. பிஎஸ்இ தளத்தில் 1913 பங்குகள் இறக்கத்தைச் சந்தித்தன. 825 பங்குகள் மட்டுமே இறக்கமடையாமல் ஓரளவு ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதேபோல் என்எஸ்இ தளத்தில் 11 குறியீடுகளுமே இறக்கத்தைச் சந்தித்தன. முக்கியமாக நிஃப்டி வங்கி, நிஃப்டி தனியார் வங்கி குறியீடுகள் 5 சதவீதம் வரை இறங்கின.

இந்த இறக்கம் குறித்து ஐடிபிஐ கேபிடல் ஆராய்ச்சி பிரிவு தலைவர் ஏ.கே.பிரபாகர் கூறுகையில், “கடந்த ஆண்டில் கரோனா பாதிப்பு நெருக்கடி காரணமாக வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. வட்டி விகிதம் குறைக்கப்பட்டதை அடுத்து நிஃப்டி 7500 என்ற இறக்கத்திலிருந்து மீண்டும் கடந்த 12 மாதங்களில் இரண்டு மடங்கு உயர்ந்தது. தற்போது பணவீக்கம் உயரலாம் என்ற அச்சத்தின் காரணமாக வட்டி விகிதம் மீண்டும் உயர்த்தப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பதட்டமடைந்து பங்குகளை விற்றுவருகின்றனர். இந்தப் போக்கில் நிஃப்டியானது குறுகிய காலத்தில் 13,900 என்ற நிலைவரை இறங்க வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x