Published : 16 Feb 2021 07:07 PM
Last Updated : 16 Feb 2021 07:07 PM

பிஎஸ்-6 எரிபொருள் உற்பத்தி; ரூ.34 ஆயிரம் கோடி முதலீடு: அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்

புதுடெல்லி

பிஎஸ்-6 எரிபொருள் உற்பத்திக்கு, சுத்திகரிப்பு ஆலைகளை மேம்படுத்த ரூ.34 ஆயிம் கோடியை எண்ணெய் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

11வது உலக பெட்ரோலிய கரி மாநாடு மற்றும் உலக எதிர்கால எரிபொருள் மாநாட்டில் இன்று பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:

இந்தியாவின் எரிசக்தி தேவை எதிர்காலத்தில் அதிகரிக்கும். குறைந்த அளவிலான கார்பன் பொருளாதாரத்துக்கு இந்திய எரிசக்தியை மாற்றும் வழிகளுக்கு, பல திடமான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.

கிடைத்தல் மற்றும் வாங்குதல் ஆகியவற்றை சமநிலைப்படுத்துவதன் மூலம், உலகளாவிய நியாயமான எரிசக்தி மாதிரியை இந்தியா உருவாக்குகிறது.

உலகின் எரிசக்தித் தேவை 2040ம் ஆண்டுவரை, ஆண்டுக்கு ஒரு சதவீதம் அதிகரிக்கும் நிலையில், இந்தியாவில் சுமார் 3 சதவீதம் அதிகரிக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதுதான் பிரதமர் நரேந்திர மோடி அரசின் முக்கிய உத்தி.

கடந்த 6 ஆண்டுகளில், எல்பிஜி அமைப்பு முறை முற்றிலும் மாறிவிட்டது. கடந்த 2014ம் ஆண்டு எல்பிஜி வாடிக்கையாளர்கள் 14.5 கோடி இருந்தனர். தற்போது இந்த எண்ணிக்கை 29 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் எல்பிஜி சிலிண்டர் கிடைக்கும் பகுதி 56 சதவீதத்திலிருந்து 99.5 சதவீதமாக அதிரிக்கப்பட்டது.

உஜ்வலா திட்டம் மூலம், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 8 கோடி குடும்பங்களுக்கு எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டன. இது சமூகப் பொருளாதார மாற்றத்திலும், பெண்களின் மேம்பாட்டிலும் முக்கிய வினையூக்கியாக செயல்பட்டது. பிரதமரின் உஜ்வலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி எல்பிஜி இணைப்புகள் வழங்கப்படவுள்ளன.

வாகன மாசைக் குறைக்க, கடந்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ் - 6 தொழில்நுட்பத்துக்கு, இந்தியா முன்னேறியள்ளது. பிஎஸ் - 6 விதிமுறைகள், யூரோ-6 விதிமுறைகளுக்கு நிகரானது. இதன் மூலம் காற்றில் கந்தக அளவு குறைக்கப்படுகிறது.

உலகின் சுத்தமான யூரோ-6 பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா இணைந்து விட்டது. பிஎஸ்-6 எரிபொருள் உற்பத்திக்கு சுத்திகரிப்பு ஆலைகளை மேம்படுத்த ரூ.34 ஆயிரம் கோடியை எண்ணெய் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன”.

இவ்வாறு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x