Published : 14 Feb 2021 12:09 PM
Last Updated : 14 Feb 2021 12:09 PM
சமூக நலனை மனதில் கொண்டு அடிப்படை பாதுகாப்பு வசதிகளை குறைந்த விலையில் வாகன உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டுமென்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தினார்.
சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுப்பதன் மூலம் ஒரு நபருக்கு சுமார் ரூ.90 லட்சம் சேமிக்கலாம் என்ற சமீபத்திய ஆய்வொன்றை சுட்டிக்காட்டிய கட்கரி, பாதுகாப்பு வசதிகளை வாகன உற்பத்தியாளர்கள் மேலும் அதிகரிப்பது அவசியம் என்றார்.
“சாலை விபத்து காயங்கள் மற்றும் உடல் ஊனங்கள்: இந்திய சமூகத்தின் மீதான சுமை” என்ற சேவ் லைஃப் ஃபவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலக வங்கி அறிக்கையை வெளியிட்ட அமைச்சர் இவ்வாறு கூறினார்.
சாலை விபத்துகள் இந்தியா போன்ற நாடுகளில் பொது சுகாதார பிரச்சினையாக விளங்குவதாக கூறிய கட்கரி, சாலை பாதுகாப்பு பொறியியல், கல்வி, அமலாக்கல் மற்றும் அவசரகால சேவைகள் ஆகியவற்றை வலுப்படுத்துவதன் மூலம் சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்புகளை குறைக்க தம்முடைய அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கட்கரி கூறினார்.
உலக வங்கியுடன் இணைந்து பல்வேறு திட்டங்களில் அரசு பணியாற்றி வருவதாகவும், அவற்றில் ஒன்று ஐராட் எனப்படும் சாலை விபத்து தரவுதளத்தை முறைப்படுத்துதல் என்றும் கட்கரி கூறினார். சாலை பாதுகாப்பு வாரத்தை நாடு கொண்டாடி வரும் வேளையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT