Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் ரூ.80 ஆயிரம் வரை சலுகை

புதுடெல்லி

பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் வரி பொறுப்புகளில் ரூ.80 ஆயிரம் வரை செலவு செய்யும் விதத்தில் சலுகை அளிக்க நிதி அமைச்சகம் பரிசீலித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் இக்கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி பொறுப்பில் ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.80ஆயிரம் வரை சலுகை அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

வரி செலுத்துவதற்கான வரம்பை, கடந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சகம் மாற்றி அமைத்தது. புதிய முறையை தேர்வு செய்தால்குறைந்த அளவில் வரி செலுத்தும் வகையில் அது வடிவமைக்கப்பட்டிருந்தது. எனினும் அத்தகைய விதிமுறையை தேர்வு செய்யும் வரி செலுத்துவோர் சில விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையில் செலவிட்டால் மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும்.

இதன் காரணமாகவே இப்புதிய முறையை பலரும் தேர்வு செய்யவில்லை என்று தெரிகிறது. அதேபோல இப்புதிய முறை வரிசெலுத்துவோர் மத்தியில் போதிய வரவேற்பையும் பெறவில்லை. இதைக் கருத்தில் கண்டு வருமானவரி செலுத்தும் வரம்பில் புதிய வரைமுறைகளை பட்ஜெட்டில் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வரி விதிப்பு வரம்பின்படி ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரையான வருமானத்துக்கு வரிகிடையாது. ரு.2.5 லட்சம் முதல்ரூ.5 லட்சம் வரையான வருமானத்துக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையான வருமானத்துக்கு 10 சசதவீதமும். ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையான தொகைக்கு 15 சதவீதமும், ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரையான வருமானத்துக்கு 20 சதவீதமும் வரி விதிக்கப்படும்.

அதேபோல ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையான வருமானத்துக்கு 25 சதவீதமும், ரூ.15 லட்சத்துக்கு மேலான தொகைக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பானது 60 வயது வரையிலான தனி நபருக்கான வருமான வரி விதிப்பாகும்.

நிரந்தர விலக்கு அளிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட வரம்பையும் மத்திய அரசு உயர்த்தும் என தெரிகிறது. சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் 3 விதமான வருமானவரி விதிப்பு வரம்பு நிர்ணயிக்கப்படுவதாக கடந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

தனி நபருக்கான நிரந்தர கழிவுக்கான விலக்குத் தொகை ரூ.1 லட்சம் வரை அதிகரிக்கப்படலாம் என இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனம் (ஃபிக்கி) கருத்து தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு நிரந்தர கழிவு தொகைக்கான வரம்பை அரசு உயர்த்தும் என இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) கருத்து தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மாதாந்திர சம்பளதாரர்கள் இந்த பட்ஜெட்டில் ஆச்சரியமளிக்கும் வகையிலான சலுகைகள் இருக்கும் என எதிர்பார்ப்பதாக விக்டோரியா லீகல் நிர்வாக பங்குதாரர் ஆதித்ய சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x