Published : 12 Jan 2021 03:19 PM
Last Updated : 12 Jan 2021 03:19 PM

ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை; மாநிலங்களுக்கு 11வது தவணைத் தொகை ரூ.6 ஆயிரம் கோடி

ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறையைப் போக்க மாநிலங்களுக்கு 11வது தவணைத் தொகை ரூ.6 ஆயிரம் கோடி கடனாக பெற்று மத்திய அரசு வழங்கியது.

சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீடு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, 11வது வாரத் தவணையாக ரூ.6,000 கோடியை மாநிலங்களுக்கு மத்திய நிதித்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இவற்றில் ரூ.5,516.60 கோடி ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினராக உள்ள 23 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரூ.483.40 கோடி சட்டப்பேரவையுடன் கூடிய 3 யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன (தில்லி, ஜம்மு காஷ்மீர் மற்றும் புதுச்சேரி). மீதமுள்ள 5 மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, சிக்கிம் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி அமலாக்கத்தால் வருவாய் பற்றாக்குறை ஏற்படவில்லை.

தற்போது, 60 சதவீத ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் ரூ.60,066.36 கோடி மாநிலங்களுக்கும், ரூ.5,933.64 கோடி 3 யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 11வது தவணைத் தொகையும் இந்த வாரத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை 5.1057 சதவீத வட்டி வீதத்தில் கடனாக பெறப்பட்டுள்ளது. இது வரை ரூ.66,000 கோடியை, சராசரி வட்டி வீதம் ரூ.4.7271 சதவீதத்தில் மத்திய அரசு கடனாகப் பெற்று வழங்கியுள்ளது.

தமிழகம், ஜனவரி 11ம் தேதி வரை, மாநில மொத்த உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு அதாவது ரூ.9,627 கோடி கூடுதலாக கடன் பெறவும், சிறப்பு ஏற்பாட்டின் மூலம் ரூ.4210.58 கோடி திரட்டவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ரூ.444.34 கோடி கடன் கூடுதலாகப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x