Published : 11 Jan 2021 05:20 PM
Last Updated : 11 Jan 2021 05:20 PM

பசு சாணத்தில் காதி இயற்கை டிஸ்டம்பர், எமல்ஷன் வர்ணங்கள்: நிதின் கட்கரி நாளை அறிமுகப்படுத்துகிறார்

படம்: ட்விட்டர்

புதுடெல்லி,

காதி கிராமத் தொழில்கள் ஆணையம் தயாரித்துள்ள புதுமையான வர்ணத்தை மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை, குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் நிதின் கட்கரி ஜனவரி 12-ஆம் தேதி (செவ்வாய்) அவரது இல்லத்தில் அறிமுகப்படுத்துகிறார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த, விஷத் தன்மையற்ற வகையில் “காதி இயற்கை வர்ணம்” என்று பெயரிடப்பட்டுள்ள சுவர் பூச்சுக்கலவை, பூஞ்சைக்கும், நுண்ணுயிரிக்கும் எதிராக செயல்படும் முதல் வர்ண தயாரிப்பாகும். பசு சாணத்தை அடிப்படைப் பொருளாகக் கொண்டு மணமில்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பூச்சுக்கலவை குறைந்த விலையில் இருப்பதுடன் இந்திய தர நிர்ணய அமைப்பின் சான்றையும் பெற்றுள்ளது. காதி இயற்கை வர்ணம் 2 விதங்களில் கிடைக்கின்றன- டிஸ்டம்பர் வர்ணம், நெகிழி எமல்ஷன் வர்ணம்.

காரீயம், பாதரசம், குரோமியம், ஆர்செனிக், காட்மியம் போன்ற உலோகங்கள் இல்லாத வகையில் இந்த வர்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உள்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுவதுடன், தொழில்நுட்ப மாற்றத்தின் வாயிலாக நிலையான வேலை வாய்ப்பும் உருவாக்கப்படும். இந்தத் தொழில்நுட்பம், இயற்கை சார்ந்த பொருட்களின் தயாரிப்பில் பசு சாணத்தை முக்கிய பொருளாகப் பயன்படுத்துவதை அதிகரிப்பதுடன், விவசாயிகள், கோ சாலைகளின் வருவாயையும் அதிகரிக்கும்.

இதன் மூலம் விவசாயிகள்/ கோ சாலையின் ஒரு விலங்கிற்கு ஆண்டிற்கு சுமார் ரூ. 30,000 கூடுதல் வருமானமாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பசு சாணத்தின் பயன்பாடு சுற்றுச்சூழலை தூய்மையாக்குவதுடன், வடிகால்களில் ஏற்படும் அடைப்பையும் தடுக்கும்.

மும்பை தேசிய சோதனை மையம், புது தில்லி ஸ்ரீராம் தொழில் ஆராய்ச்சி நிறுவனம், கசியாபாத் தேசிய சோதனை மையம் ஆகிய மூன்று தேசிய ஆய்வகங்களில் காதி இயற்கை டிஸ்டம்பர் மற்றும் எமல்ஷன் வர்ணங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

காதி இயற்கை எமல்ஷன் வர்ணம் இந்திய தர நிர்ணய அமைப்பின் 15489:2013 சான்றையும், காதி இயற்கை டிஸ்டம்பர் வர்ணம் இந்திய தர நிர்ணய அமைப்பின் 428:2013 சான்றையும் பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x