Published : 29 Dec 2020 09:21 AM
Last Updated : 29 Dec 2020 09:21 AM
மத்திய நிதி அமைச்சகம், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர்கொள்வதற்காக ஒன்பதாவது தவணையாக ரூ.6,000 கோடியை மாநில அரசுகளுக்கு வழங்கியிருக்கிறது.
இதில், ரூ.5,516.60 கோடி 23 மாநிலங்களுக்கும், ரூ.483.40 கோடி ஜிஎஸ்டி கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள சட்டசபையுடன் கூடிய மூன்று யூனியன் பிரதேசங்களுக்கும் (தில்லி ஜம்மு & காஷ்மீர் மற்றும் புதுச்சேரி) வழங்கப்பட்டுள்ளது.
மிச்சமுள்ள ஐந்து மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மற்றும் சிக்கிமுக்கு சரக்கு மற்றும் சேவை வரி முறையைச் செயல்படுத்தியதால் எந்த விதமான வருவாய் பாதிப்பும் இல்லை.
சரக்கு மற்றும் சேவை வரி முறையை செயல்படுத்தியதால் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சார்பில் சிறப்புச் சாளரம் ஒன்றின் மூலம் மத்திய அரசு இந்தக் கடனை வாங்குகிறது.
இதுவரை, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான சிறப்பு சாளரத்தின் கீழ் ரூ.54,000 கோடியை கடன்களுக்கு நிதி அமைச்சகம் வழி வகுத்துள்ளது.
இது தவிர, மொத்த மாநில உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடனாக பெற்றுக் கொள்ளவும் மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.9627 கோடி கடனாகப் பெற அனுமதி அளிக்கப்பட்டு, ரூ.3531.02 கோடி இது வரை கடனாக சிறப்பு சாளரத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT