Published : 27 Dec 2020 03:14 AM
Last Updated : 27 Dec 2020 03:14 AM

உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக 2025-ம் ஆண்டில் இந்தியா முன்னேறும்: பொருளாதார வர்த்தக ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி

உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் அதாவது 2025-ம் ஆண்டு முன்னேறும் என்று பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வு மையம் (சிஇபிஆர்) தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் நேற்று வெளியிட்ட ஆண்டறிக்கையில், 2030-ம்ஆண்டில் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தற்போது 2020-ம் ஆண்டில் இந்தியா உலகளவில் 6-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. கடந்த ஆண்டு (2019) இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறியது. இந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்ததால் ஐந்தாவது இடத்துக்கு இங்கிலாந்து முன்னேறியது. தற்போது உருவான தேக்கநிலையில் இருந்து மீள்வதற்கு சிறிது காலம் பிடிக்கும். அந்தவரிசையில் 2024-ம் ஆண்டிலேயே 5-வது இடத்துக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக சிஇபிஆர் அறிக்கை தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டில் ரூபாயின் மாற்று மதிப்பு சரிந்ததால் இங்கிலாந்து 6-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறியது.

தற்போதுள்ள சூழலில் 2021-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும். இது 2022-ம்ஆண்டில் 7 சதவீதமாக இருக்கும்என்றும் சிஇபிஆர் கூறியுள்ளது.

இந்தியாவில் வளர்ச்சி விகிதம் மிகவும் மெதுவாக இருந்தாலும் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடாகத் திகழும். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2035-ம் ஆண்டில் 5.8 சதவீத அளவை எட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தற்போது உள்ள வளர்ச்சி விகித அடிப்படையில் கணக்கிட்டால் 2030-ம் ஆண்டு இந்தியா உலகின் 3-வது பெரிய நாடாகஉயரும். இதன்படி 2025-ல் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளும். 2027-ல் ஜெர்மனியையும், 2030-ல் ஜப்பானையும் மிஞ்சிவிடும் என குறிப்பிட்டுள்ளது.

வரும் 2028-ம் ஆண்டில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு சீனா முன்னேறிவிடும் என்றும் சிஇபிஆர் குறிப்பிட்டுள்ளது.

தற்போது உள்ள மதிப்பீட்டின்படி மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜப்பானை 2030-ம் ஆண்டு இந்தியா மிஞ்சிவிடும் என குறிப்பிட்டுள்ளது. இதனால் நான்காம் இடத்தில் உள்ள ஜெர்மனி ஐந்தாமிடத்துக்கு தள்ளப்பட்டுவிடும் என சுட்டிக்காட்டியுள்ளது.

கரோனா பாதிப்புக்கு முன்பாகவே பொருளாதாரம் சரிவைச் சந்திக்கத் தொடங்கிவிட்டது. 2019-ல் கரோனா பாதிப்புகாரணமாக வளர்ச்சி 4.2 சதவீதமாக கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது. முந்தைய ஆண்டில் (2018) வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x