Published : 23 Dec 2020 07:22 AM
Last Updated : 23 Dec 2020 07:22 AM
வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, இரண்டாவது தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2021-ஐ வழங்கவிருக்கிறது.
பெருந்தொற்று காலத்தில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மேற்கொண்ட மிகச்சிறந்த நடவடிக்கைகள், முன்முயற்சிகள் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியில் கூடுதலாக புதிய பிரிவுகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. தற்சார்பு இந்தியா கனவை நிறைவேற்றுவதற்காக உள்நாட்டில் தயாரிக்கப்படும் முக்கிய அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இந்த வருடம் முக்கியத்துவம் வழங்கப்படும். இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் 2021 ஜனவரி 31 வரை பெற்றுக்கொள்ளப்படும்.
வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, குடிநீர், கல்வி, திறன் மேம்பாடு உள்ளிட்ட 15 துறைகளில் 49 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவிருக்கிறது. கூடுதலாக கல்வி நிறுவனங்கள், கொவிட்-19 தொற்றுக்கு எதிரான புதிய கண்டுபிடிப்பு உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் சிறப்பு விருதுகளும் வழங்கப்படும்.
ஒவ்வொரு பிரிவில் வெற்றி பெறுவோருக்கு தலா ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசாக அளிக்கப்படும். வெற்றியாளரும், இரண்டாம் இடம் வகிக்கும் இரண்டு பேரும் தங்களது கண்டுபிடிப்பை தகுந்த அதிகாரிகள் மற்றும் பெரு நிறுவனங்களின்முன் செயல்விளக்கம் அளித்து அதன்மூலம் புதிய வாய்ப்புகளை அவர்கள் பெறவும் ஏற்பாடு செய்யப்படும். வெற்றி பெறும் ஒரு இன்குபேட்டர் மற்றும் ஒரு ஆக்ஸிலரேட்டருக்கு தலா ரூ. 15 லட்சம் ரொக்கப் பரிசு அளிக்கப்படும்.
புது நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய ஸ்டார்ட்அப் விருதுகளை கடந்த 2019- ஆம் ஆண்டு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை அறிமுகப்படுத்தியது.
விருதுகளுக்கான விண்ணப்ப முறை குறித்து தெரிந்து கொள்ள http://www.startupindia.gov.in/ என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT