Published : 27 Nov 2020 07:23 PM
Last Updated : 27 Nov 2020 07:23 PM
துடிப்பான உயிரி-எரிவாயு சூழலியலை உருவாக்குமாறு தொழில்முனைவோருக்கு அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் தர்மேந்திர பிரதான், கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் அமையவுள்ள லீஃபிநிட்டி பயோஎனெர்ஜியின் அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு ஆலைக்கு காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார்.
ரூ 42 கோடி செலவில் உருவாகவுள்ள இந்த ஆலை, ஒரு நாளைக்கு 200 டன் கரும்பாலைக் கழிவைப் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு 10.2 டன் அழுத்தமூட்டப்பட்ட எரிவாயு மற்றும் உரத்தை உற்பத்தி செய்யும். பிரஜ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டிவிஓ இன்க் ஆகிய நிறுவனங்கள் இந்த ஆலைக்கான தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளன.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், துடிப்பான உயிரி-எரிவாயு சூழலியலை உருவாக்குமாறு தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்தார். தூய்மையான மற்றும் நீடித்து நிற்கும் எரிசக்தியை வழங்க அரசு பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.
மாசுபடுத்தும் நாடாக இந்தியா இல்லாத போதிலும், பொறுப்புள்ள உலகத் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி, நிலைத்தன்மை மற்றும் பருவ நிலை மாறுதலை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் உறுதியை அடிக்கோடிட்டுள்ளதாக பிரதான் கூறினார்.
அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகள் அனைத்து பங்குதாரர்களுக்கும் நன்மை அளிக்கும் என்று அமைச்சர் கூறினார். இந்த ஆலைகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கிவருவதாகவும் அவர் கூறினார்.
எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவது குறித்து பேசிய பிரதான், சுமார் 900 அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகளை அமைப்பதற்காக முன்னனி நிறுவனங்களுடன் கடந்த வாரம் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT