Published : 12 Nov 2020 10:08 PM
Last Updated : 12 Nov 2020 10:08 PM

3 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி: மத்திய  அரசு நடவடிக்கை

பிரதமரின் கரீப் கல்யாண் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், ஒடிசா, மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ள. 116 மாவட்டங்களில் உள்ள மூன்று லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பயிற்சியை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் தொடங்கியுள்ளது.

பிரதமர் கவுஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் ‌மூலம் கோவிட் காலத்திற்குப் பிறகு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஊரக மக்களுக்குத் திறன் சார்ந்த பயிற்சிகளை வழங்கி அதன் வாயிலாக அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.

சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்கள்/ மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள்/ துணை ஆணையர்கள் ஆகியோருடன் இணைந்து மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் குறிப்பிட்ட மாவட்டங்களில் 125 நாள் திறன் பயிற்சியைத் தொடங்க உள்ளது. கண்டறியப்பட்ட ஒரு சில மாவட்டங்களில் பயிற்சிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் படிப்படியாக வரும் மாதங்களில் இதரப் பகுதிகளிலும் செயல்படுத்தப்படும்.

ஊரக வளர்ச்சியில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவது தொடர்பாகப் பேசிய மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, திறன் மேம்பாடு மூலம் ஊரகப் பகுதிகளை வளர்ச்சி அடையச்செய்வது திறன் இந்தியா மிஷனின் அடிப்படை அம்சங்களில் ஒன்று என்றும், நாட்டில் உள்ள மொத்த தொழிலாளர்களில் 70 சதவீதத்தினர் ஊரக இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினார்.

உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ற வகையிலான திறன் பயிற்சிகளை வழங்குவதன் மூலம் நிலைத்த வாழ்க்கை முறையை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தித் தர முடியும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2020- ஆம் ஆண்டு வரை திறன் மேம்பாட்டு அமைச்சகம், பிரதமர் கவுஷல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 92 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பயிற்சிகளை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x