ஒடிசாவில் வருமானவரித்துறை தீர்ப்பாயம்: பிரதமர் மோடி 11-ம் தேதி திறந்து வைக்கிறார்

ஒடிசாவில் வருமானவரித்துறை தீர்ப்பாயம்: பிரதமர் மோடி 11-ம் தேதி திறந்து வைக்கிறார்
Updated on
1 min read

கட்டாக்கில் வருமானவரித்துறை தீர்ப்பாயத்தின் அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகத்தை பிரதமர் 11-ம் தேதி திறந்து வைக்கிறார்

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் வருமானவரித்துறையின் மேல்முறையீடு தீர்ப்பாய (ஐடிஏடி) அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 11-ம் தேதி மாலை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

மத்திய அமைச்சர்கள், ஒடிசா முதல்வர், ஒடிசா தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் ஐடிஏடி பற்றிய சிறு புத்தகம் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது.

நேரடி வரி முறையில், வருமானவரித்துறையின் மேல்முறையீடு தீர்ப்பாயம் மிக முக்கியமான அமைப்பு. இதன் தீர்ப்புதான் இறுதியானது. இதற்கு தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி திரு பி.பி.பட் தலைமை வகிக்கிறார். முதல் ஐடிஏடி, கடந்த 1941-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதன் முதல் மூன்று கிளைகள் டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டன. தற்போது நாடு முழுவதும் ஐடிஏடிக்கு 63 அமர்வுகள் உள்ளன.

ஐடிஏடி கட்டாக் அமர்வு 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, கடந்த 50 ஆண்டுகளாக வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகம் மற்றும் குடியிருப்பு வளாகம், 1.60 ஏக்கரில் நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 11-ம் தேதி மாலை 4.30 மணிக்கு திறந்து வைக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in