Published : 06 Nov 2020 12:38 PM
Last Updated : 06 Nov 2020 12:38 PM

உள்நாட்டு விமானங்களுக்கான கட்டணக் கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: பயணிகள் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியது

உள்நாட்டு விமானங்களுக்கான, கட்டணக் கட்டுப்பாடுகளை, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், அடுத்தாண்டு பிப்ரவரி 24-ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

கொவிட் முடக்கத்துக்குப்பின், உள்நாட்டு விமானப் போக்குவரத்து, கடந்த மே மாதம் அனுமதிக்கப்பட்டது. அப்போது உள்நாட்டு விமானங்களுக்கான கட்டணக் கட்டுப்பாடுகளும், கடந்த மே 21-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. குறிப்பிட்ட மணி நேரப் பயணத்துக்கு குறைந்த பட்சம் மற்றும் அதிகபட்சத் தொகை இதில் நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் கட்டணக் கட்டுப்பாடுகளை, விமானப் போக்குவரத்து அமைச்சகம் அடுத்தாண்டு பிப்ரவரி 24ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு:

தற்போது விமானப் பயணிகளின் தினசரி போக்குவரத்து கடந்த 1-ம் தேதி நிலவரப்படி, 2.05 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த மே மாதம், உள்நாட்டு விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டபோது, விமான நிறுவனங்கள் 33% விமான சேவைகளை வழங்க அனுமதிக்கப்பட்டது. அப்போது பயணிகளின் தினசரி எண்ணிக்கை 30 ஆயிரமாக இருந்தது. இந்த உச்ச வரம்பு கடந்த ஜூன் மாதம் 45%, செப்டம்பர் மாதம் 60% என உயர்த்தப்பட்டது.

விமானப் பயணிகளின் போக்குவரத்தை, விமானப் போக்குவரத்து அமைச்சகம் தினந்தோறும் கண்காணித்து வருகிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் விமான நிறுவனங்களின், விமான சேவைகள், 70 முதல் 75 சதவீதமாக மாற்றியமைக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x