Published : 04 Nov 2020 05:01 PM
Last Updated : 04 Nov 2020 05:01 PM

மருந்து பொருட்கள் ஒழுங்குமுறை: இந்தியா- இங்கிலாந்துக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி

மருந்து பொருட்கள் ஒழுங்குமுறை தொடர்பாக இந்தியா- இங்கிலாந்துக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் மருந்து மற்றும் சுகாதார பொருட்களுக்கான ஒழுங்குமுறை முகமை ஆகியவற்றுக்கு இடையே மருந்து பொருட்கள் ஒழுங்குமுறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் உள்ள சர்வதேச பொறுப்புகளின் அடிப்படையில் மருந்துப் பொருட்களின் ஒழுங்குமுறை தொடர்பான வலுவான தகவல்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் இங்கிலாந்தின் மருந்து மற்றும் சுகாதார பொருட்களுக்கான ஒழுங்குமுறை முகமை ஆகியவை பரிமாறிக்கொள்ளவும் இது சம்பந்தமான திட்ட அறிக்கையை தயாரிக்கவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவியாக இருக்கும். இரு நாடுகளின் ஒழுங்குமுறை ஆணையங்கள் இடையே கீழ்க்கண்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளது

அ) அதிக பாதுகாப்பு தேவைப்படும் மருந்தாக்கியல் கண்காணிப்பு உள்ளிட்ட துறைகளில் பாதுகாப்பு குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்ளுதல். மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பாதுகாப்பு அம்சங்களும் இதில் அடங்கும்.

ஆ) இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகள் சார்பாக நடத்தப்படும் அறிவியல் மற்றும் செய்முறை மாநாடு, கருத்தரங்கம் மற்றும் மன்றங்களில் பங்கேற்பது

இ) நல்ல ஆய்வக நடைமுறைகள், நல்ல மருத்துவ நடைமுறைகள், நல்ல உற்பத்தி நடைமுறைகள், நல்ல விநியோக நடைமுறைகள் மற்றும் நல்ல மருந்தாக்கியல் கண்காணிப்பு நடைமுறைகள் குறித்து ஒத்துழைப்பும், தகவல் பரிமாற்றமும்

ஈ) பரஸ்பர ஒப்புதல் வழங்கப்பட்ட பகுதிகளில் திறன் மேம்பாடு

உ) ஒரு நாட்டின் ஒழுங்குமுறை திட்ட அறிக்கை, தேவைகள் மற்றும் வழிமுறைகளுக்கு மற்றொரு நாடு ஊக்கம் அளிப்பது; இரு நாடுகளின் எதிர்கால ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவது

ஊ) மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் குறித்த சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுதல்

எ) உரிமம் பெறாத ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை கட்டுப்படுத்துவது தொடர்பான தகவல் பரிமாற்றம்

ஏ) சர்வதேச மன்றங்களில் இருநாடுகளின் ஒருங்கிணைப்பு

இரு நாடுகளின் ஒழுங்குமுறை அம்சங்களை புரிந்துகொள்ள வழிவகுப்பதுடன், மருந்துப் பொருட்களின் ஒழுங்குமுறைத் துறையில் இந்தியாவும் இங்கிலாந்தும் கூடுதல் ஒத்துழைப்பை அளிக்கவும், சர்வதேச மன்றங்களில் சிறந்த ஒருங்கிணைப்பை வழங்கவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவியாக இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x