Published : 29 Oct 2020 12:50 PM
Last Updated : 29 Oct 2020 12:50 PM
இந்தியாவில் உள்ள அனைத்து விதமான எரிசக்தியிலும் உற்பத்தித் திறனை அதிகரித்து பலன்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்தியாவுடன் பங்குதாரர்களாக இணையுமாறு சர்வதேச தொழில் நிறுவனங்களுக்கும், நிபுணர்களுக்கும் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்தார்.
செரா வார இந்திய எரிசக்தி மன்றத்தின் நிறைவு நிகழ்ச்சியில் நேற்று மாலை பேசிய அவர், எரிசக்தி பாதுகாப்பு, கட்டமைப்பு ஆகியவற்றுக்கு இந்திய அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை பிரதமர் நரேந்திர மோடி இந்திய எரிசக்தி மன்றத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து புரிந்து கொள்ளலாம் என்றார்.
சர்வதேச எரிசக்தித் துறையை கோவிட்-19 பெருந்தொற்று கடுமையாகப் பாதித்துள்ள நேரத்தில், இந்தியாவின் எரிசக்தி சூழலை மாற்றியமைக்க அரசு தீவிரம் காட்டி வருவதையும் இது பிரதிபலிக்கிறது என்று அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தது நமக்கு மிகுந்த கௌரவத்தை அளிக்கிறது என்று கூறிய திரு பிரதான், தன்னுடைய உரையில் பிரதமர் சுட்டிக்காட்டிய ஏழு முக்கிய உந்துசக்திகளுடன் கூடிய இந்தியாவின் புதிய எரிசக்தி வரைபடத்தை பற்றி குறிப்பிட்டார்.
சமீப காலங்களில் அடைந்துள்ள முன்னேற்றங்களுக்காக இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையை திரு பிரதான் பாராட்டினர். இத்துறை தற்போதைய சவாலான காலகட்டத்தில் சரியான நேரத்தில் விநியோகங்களை உறுதி செய்தது பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார்.
சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் இந்தியாவின் பல்முனை எரிசக்தி முன்னேற்றத் திட்டத்தில் பங்குதாரர்களாக இணைய வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT