Published : 28 Oct 2020 02:25 PM
Last Updated : 28 Oct 2020 02:25 PM
பார்சல் தொடர்பான சுங்கத் தகவல்களை எலக்ட்ரானிக் முறையில் பகிர்ந்து கொள்வதற்கு இந்தியா மற்றும் அமெரிக்கா தபால் துறைகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தியா- அமெரிக்கா இடையேயான, 2 பிளஸ் 2 கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துத்துறை அமைச்சர் டாக்டர் மார்க் எஸ்பர் தலைமையில் அமெரிக்க குழுவினர் இந்தியா வந்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் தபால் பார்சல் தொடர்பான சுங்க தகவல்களை எலக்ட்ரானிக் முறையில் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் இந்தியா மற்றும் அமெரிக்கா தபால் துறைகளுக்கு இடையே கையெழுத்தானது.
இந்திய தபால் துறை (சர்வதேச உறவுகள் மற்றும் உலகளாவிய வர்த்தகம்) துணை தலைமை இயக்குனர் பிரணாய் சர்மா, அமெரிக்க தபால் துறை(சர்வதேச வர்த்தக பிரிவு) நிர்வாக இயக்குனர் ராபர்ட் ரெய்ன்ஸ் ஜூனியர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம் மூலம் பார்சல்கள் போய் சேருவதற்கு முன்பே, அது தொடர்பான தகவல்களை இரு நாடுகளும் எலக்ட்ரானிக் முறையில் பகிர்ந்து கொண்டு, சுங்கத் துறை அனுமதியையும் பெற முடியும். இந்த ஒப்பந்தம் இரு நாட்டு தபால் சேவைகளின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும்.
இந்தியா-அமெரிக்கா இடையே தபால் துறை மூலமாக அதிகளவில் கடிதங்கள் மற்றும் பார்சல் பரிமாற்றம் நடக்கிறது. கடந்த 2019ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 20 % விரைவு தபால்களும், 30 சதவீத கடிதங்கள் மற்றும் சிறு பார்சல்கள் தபால் துறை மூலம் சென்றுள்ளன.
அதேபோல் இந்திய தபால் துறை, அமெரிக்காவில் இருந்து, 60% பார்சல்களை பெற்றுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை தயாரிப்புகள், மருந்துகள், நகைகள், அமெரிக்காவுக்கு அதிகளவில் அனுப்பப்படுகின்றன. ஏற்றுமதி பொருட்களுக்கு சுங்கத்துறை அனுமதி விரைவாக கிடைக்க வேண்டும் என்ற ஏற்றுமதியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை இந்த ஒப்பந்தம் மூலம் நிறைவேறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT