Published : 23 Oct 2020 08:58 PM
Last Updated : 23 Oct 2020 08:58 PM

மத்திய அரசு ரூ.6000 கோடி கடன் வாங்கி, முதல் தவணை ஜிஎஸ்டி இழப்பீட்டை 16 மாநிலங்களுக்கு வழங்கியது

ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநிலங்களுக்கு தருவதற்காக மத்திய அரசே கடன் வாங்க ஒப்புக் கொண்டு அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு ரூ.6,000 கோடி கடன் பெற்று முதல் தவணை ஜிஎஸ்டி இழப்பீட்டை 16 மாநிலங்களுக்கு வழங்கியது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

2020-2021ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி வசூலில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறைக்கு தீர்வு காண ஒரு சிறப்பு கடன் வாங்கும் சாளரத்தை இந்திய அரசு உருவாக்கி உள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட தொடர்ச்சியாக கடன் வழங்குவதற்காக சிறப்பு சாளரத்தை 21 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள் தேர்வு செய்துள்ளன.

இது தவிர, ஜிஎஸ்டி இழப்பீட்டில் 5 மாநிலங்களுக்கு எந்த பற்றாக்குறையும் ஏற்படவில்லை. இன்றைக்கு ஆந்திரா, அசாம், பீகார், கோவா, குஜராத், ஹரியானா, இமாசலப்பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களுக்கும், தில்லி, ஜம்மு& காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு ரூ.6000 கோடி கடனாகப் பெற்று முதல் தவணையாக வழங்கி உள்ளது.

இந்த கடனின் வட்டி விகிதம் 5.19 சதவிகிதமாக இருக்கும். இது வாரம் தோறும் ரூ.6000 கோடியை மாநிலங்களுக்கு வழங்கும் நோக்கத்தைக் கொண்டது. கடன் பெறும் காலம் பரவலாக 3 முதல் 5 ஆண்டுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x