Published : 23 Oct 2020 10:20 AM
Last Updated : 23 Oct 2020 10:20 AM

குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல்: கடந்த ஆண்டை விட 28 சதவீதம் அதிகம்

புதுடெல்லி

குறைந்தபட்ச ஆதரவு விலையில் 2020-21 கரீப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதலில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சேர்ந்த 10.09 லட்சம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

2020-21 கரீப் பருவத்திற்குத் தேவையான சந்தைப்படுத்துதல் தொடங்கப்பட்டதையடுத்து கடந்த காலங்களைப் போலவே இந்த வருடமும் அதே குறைந்தபட்ச ஆதரவு விலையில், விவசாயிகளிடமிருந்து அரசு பயிர்களைக் கொள்முதல் செய்கிறது.

தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2020-21 கரீப் பருவத்திற்கான நெல் கொள்முதல் சுமுகமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநிலங்களில் அக்டோபர் 21ஆம் தேதி வரை 116.66 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டின் 90.76 லட்சம் மெட்ரிக் டன்னை விட 28.55 சதவீதம் கூடுதலாகும். மொத்தக் கொள்முதலில், பஞ்சாபிலிருந்து மட்டும் 75.11 லட்சம் மெட்ரிக் டன் (64.38%) நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக10.09 லட்சம் விவசாயிகளிடமிருந்து ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூபாய்18880 மதிப்பில், ரூபாய் 22026.26 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அக்டோபர் 21ஆம் தேதி வரை அரசு தன் முதன்மை முகமைகளின் மூலம் ரூபாய் 6.36 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையில், 883.34 மெட்ரிக் டன் அவரை விதைகளையும், உளுந்தையும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த 862 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது. இதேபோல 52.40 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில், 5089 மெட்ரிக் டன் கொப்பரையைக் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள 3961 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பருத்திக் கொள்முதல் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சுமுகமாக நடைபெற்று வருகிறது.அக்டோபர் 21ஆம் தேதி வரை ரூபாய் 76821.02 லட்சம் மதிப்பில் 272136 பேல்கள் 53181 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x