

உடான் திட்டம் தானாக நீடித்து நிற்கும் வகையில் வலுப்படுத்துவதற்கும், அதன் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பங்குதாரர்கள் பணியாற்ற வேண்டும் என்று விமான போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் பிரதீப் சிங் கரோலா இன்று கூறினார்.
உடான் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட காணொலி கூட்டத்தில் பேசிய அவர், சேவைகள் வழங்கப்படாத மற்றும் குறைந்த அளவில் சேவைகள் வழங்கப்பட்ட 50 விமான நிலையங்கள் உடான் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
சாதாரண மக்கள் தொலைதூர விமானப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் உடான் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக விமான போக்குவரத்து அமைச்சக செயலாளர் கூறினார்.
அதிக அளவிலான மக்கள் உடான் திட்டத்தின் பயனை பெறுவதற்காக சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விமான நிறுவனங்களை அவர் கேட்டுக்கொண்டார்.
இந்திய விமான நிலையங்கள் ஆணையம், விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் இந்த காணொலி கூட்டத்தில் கலந்துகொண்டனர்.