Published : 17 Oct 2020 06:38 AM
Last Updated : 17 Oct 2020 06:38 AM

மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு விவகாரம்; மத்திய அரசே கடன் வாங்கி தர முடிவு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

மாநில அரசுகளுக்குப் பதிலாக மத்திய அரசே ரூ.1.10 லட்சம் கோடியை கடனாகப் பெற்று சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கரோனா ஊரடங்கு அமல் காரணமாக ஜிஎஸ்டி வருமானம் குறைந்தது. இதனால் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசால் அளிக்க முடியாத சூழல் உருவானது. இதற்காக மாநில அரசுகளே தங்களுக்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை பொதுச் சந்தையில் கடனாக திரட்டிக் கொள்ளலாம் என்ற யோசனையை மத்திய நிதி அமைச்சகம் முன்வைத்தது. ஏறக்குறைய 4 மாதங்களாக நீடித்து வந்த இந்த யோசனையை பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர பிற மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தன.

இந்நிலையில் இழப்பீட்டு தொகையை ஈடுகட்ட கடன் தொகை மூலம் ரூ.1.1 லட்சம் கோடி ஈடுகட்ட முடியும். இந்தத் தொகையை மத்திய அரசு பெற்று மாநிலங்களுக்கு வழங்க உள்ளது. கடன் திரட்டுவதற்கான வளங்கள் உள்ளதால் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை முழுவதுமாக இந்த ஆண்டே வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இத்தொகைக்கு குறைந்த அளவு வட்டியே இருக்கும். வழங்கப்படும் தொகை மற்றும் மொத்த தொகை எதிர்காலத்தில் வழங்க வேண்டிய வரித் தொகை நிலுவை மூலம் ஈடுகட்டப்படும் என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசே கடனைப் பெற்று அளிக்க முன்வந்திருப்பதற்கு காரணம், அதிக வட்டிக்கு மாநில அரசுகள் கடன் பெற்று கஷ்டப்படக் கூடாது என்பதற்காகதான் என்று அமைச்சர் கூறினார்.

மத்திய அரசு கடன் பெறுவதால் எந்த வகையிலும் நிதிப் பற்றாக்குறையில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையானது 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்பட்டது. மாநில அரசுகள் திரட்டும் வரி வருவாய் குறைந்தால் அதை இழப்பீட்டு தொகை மூலம் ஈடுகட்டப்படும் என்றும், இந்த இழப்பீடு தொகை 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றும் அப்போது மத்திய அரசு உறுதி அளித்தது.

ஆனால் ஜிஎஸ்டி வருவாய் வசூல் குறைந்ததால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசால் வழங்க முடியவில்லை.

எதிர்வரும் காலங்களில் வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கு தொகைக்கு ஈடாக கடன் திரட்டிக் கொள்ளலாம் என மாநில அரசுக்கு அளித்த யோசனையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x