Published : 15 Oct 2020 09:54 PM
Last Updated : 15 Oct 2020 09:54 PM

உற்பத்தி துறையில் கொள்முதல் குறியீடுகள் மிக அதிக அளவை எட்டியுள்ளது: நிர்மலா சீதாராமன்

கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, உற்பத்தி துறையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் கொள்முதல் குறியீடுகள் மிக அதிக அளவை எட்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எப்) முழு அமர்வு கூட்டம் மற்றும் நிதிக்குழு கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார்.

கோவிட்-19 சூழலில் ‘மீட்பு நடவடிக்கை தூண்டுவது’ என்ற தலைப்பில் ஐஎம்எப் நிர்வாக இயக்குனரின் உலகளாவிய கொள்கை அடிப்படையில் இந்த கூட்டத்தில் விவாதம் நடந்தது. கோவிட்-19 பாதிப்பை எதிர்த்து பேராட மேற்கொண்ட நடவடிக்கைகளை, சர்வதேச நிதியத்தின் குழு உறுப்பினர்கள் எடுத்துக் கூறினர்.

இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகளை மீட்க, தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட நிதியுதவி திட்டங்களை சுருக்கமாக எடுத்துரைத்தார். உற்பத்தி துறையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும், கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, உற்பத்தி துறையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் கொள்முதல் குறியீடுகள் மிக அதிக அளவை எட்டியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். நுகர்வோர் செலவினத்தை அதிகரிப்பதற்காக, 10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான திட்டங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகளாவிய பொருளாதாரத்துக்கு, சிறந்த ஆலோசனைகள் வழங்கியதற்காக ஐஎம்எப் மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் கிரிஸ்டாலினா ஜியார்ஜிவாவுக்கு மத்திய நிதியமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கோடிக்கணக்கான மக்களை பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் குறைந்த வருவாய் உள்ள நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் போராடி வருவதாகவும், இந்த மீட்பு மற்றும் மறுவாழ்வு முயற்சிகளை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட அனுமதிக்க கூடாது எனவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x