Published : 14 Oct 2020 04:38 PM
Last Updated : 14 Oct 2020 04:38 PM
புதிய வகை கோதுமை பயிர், மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தின் விவசாயிகள் இருமடங்கு அறுவடையைப் பெற உதவியிருக்கிறது.
குறிப்பிடத்தக்க உயர் விளைச்சல் தரக்கூடியதாக இந்திய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கோதுமைப் பயிர் இப்போது விவசாயிகளுக்குக் கிடைத்துள்ளது. இந்த புதிய கோதுமை வகையில் இருந்து கிடைத்த மாவில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தி தரத்தில் உயர் மதிப்பெண்களை பெற்றிருக்கிறது.
எம்ஏசிஎஸ் 6478 என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை கோதுமை பயிர், இந்திய அரசின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான அகர்கார் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் உள்ள கரஞ்ச்காப் கிராம விவசாயிகள் இந்த புதிய வகை கோதுமைப் பயிரைப் பயிரிட்டபோது, அவர்களுக்கு இருமடங்கு விளைச்சல் கிடைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தின் கோரேகான் தாலுகாவில் உள்ள கிராமத்தின் விவசாயிகள் புதிய வகை கோதுமைப்பயிரில் இப்போது ஒரு ஹெக்டருக்கு 45-60 குவிண்டால் அறுவடையைப் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் பழைய கோதுமை வகைகளான எச்டி 2189, லோக் 1 போன்றவற்றைப் பயிரிட்டபோது அவர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 25-30 குவிண்டால் என்ற அளவில்தான் விளைச்சல் கிடைத்து வந்தது.
இந்த புதிய வகை கண்டுபிடிப்பான பொதுவான கோதுமை அல்லது பிரட் கோதுமை உயர்விளைச்சல் தரும் கோதுமை என்றும் அழைக்கப்படுகிறது. இது விதைத்ததில் இருந்து 110 நாட்களில் அறுவடைக்கு வரும். இலை மற்றும் தண்டு துரு போன்ற பெரும்பாலான நோய்களை எதிர்த்து வளரும் தன்மை கொண்டது. அம்பர் நிற நடுத்தர அளவிலான இந்த கோதுமை 14% புரோட்டின், 44.1 பிபிஎம் துத்தநாகம் மற்றும் 42.8 பிபிஎம் இரும்பு ஆகிய சத்துகளைக் கொண்டுள்ளது. இதர கோதுமை வகைகளில் உள்ள சத்துகளை விடவும் இது அதிகமாகும். இந்த புதிய வகை கோதுமை குறித்த ஆராய்ச்சி அறிக்கை தற்போதைய நுண்ணுயிரியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் சர்வதேச இதழில் வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT