Published : 09 Oct 2020 01:17 PM
Last Updated : 09 Oct 2020 01:17 PM
வரும் டிசம்பர் மாதம் முதல் வங்கிகளில் மிகப் பெரிய தொகையை அனுப்பப் பயன்படுத்தப்படும் ஆர்டிஜிஎஸ் (RTGS) முறை 24 மணி நேரமும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
2 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் இன்று நடந்தது. அதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “குறுகிய காலக் கடனுக்கான வட்டி வீதம் தொடர்ந்து 4 சதவீதமாகவே தொடரும். வட்டி வீதத்தில் மாற்றமில்லை. நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 9.5 சதவீதமாகக் குறைய வாய்ப்புள்ளது எனக் கணித்துள்ளோம் .
அப்போது வங்கிகள் மூலம் மிகப்பெரிய தொகை பரிமாற்றம் செய்யப்படும் ஆர்டிஜிஎஸ் முறை டிசம்பர் மாதத்திலிருந்து ஆண்டு முழுவதும், 24 மணி நேரமும் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.
தற்போது ஆர்டிஜிஎஸ் செய்யும் நடைமுறை என்பது வங்கியின் வேலை நாட்களில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் சேவை இருக்காது. ஆனால், வரும் டிசம்பர் மாதம் முதல் 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் சேவை கிடைக்கும்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நெப்ஃட் சேவை ஆண்டு முழுவதும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட ஆர்டிஜிஎஸ் சேவை நடைமுறைக்கு வந்தால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே ஆர்டிஜிஎஸ் சேவை 24 மணி நேரமும் செயல்படும் வசதி இருக்கும்
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில், கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து நெஃப்ட், ஆர்டிஜிஎஸ் சேவைக்குக் கட்டணம் விதிக்கும் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆர்டிஜிஎஸ் சேவை என்பது, மிகப்பெரிய தொகையை ஒரு வங்கியிலிருந்து அதே வங்கியின் பிற கிளைக்கும், மற்ற வங்கிக்கும் அனுப்பப் பயன்படுகிறது. நெஃப்ட் சேவையில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை அனுப்ப முடியும். அதற்கு மேல் அனுப்ப ஆர்டிஜிஎஸ் சேவைக்குள் வர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT