Published : 02 Sep 2015 10:01 AM
Last Updated : 02 Sep 2015 10:01 AM
கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக டீசலில் இயங்கும் ஹைபிரிட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. சியாஸ் என்ற பெயரில் இது டெல்லியில் நேற்று அறிமுகமானது. செடான் பிரிவைச் சேர்ந்த பெட்ரோலில் இயங்கும் கார்கள் சியாஸ் ரகக் கார்கள் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் இந்தக் காரை மத்திய கனரகத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கூடுதல் செயலர் அம்புஜ் சர்மா அறிமுகப்படுத்தினார்.
இந்தக் காரின் விலை ரூ. 8.23 லட்சம் முதல் ரூ. 10.17 லட்சம் வரையாகும். இந்தக் காரில் 1.3 லிட்டர் இன்ஜின் உள்ளது. மேலும் இதில் ஜெனரேட்டர் உள்ளது. அத்துடன் அதிக திறன் மிக்க பேட்டரிகள் உள்ளன. இவை கார் இயங்கும்போது ஜெனரேட் டரிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து காரிலுள்ள மின் மோட்டாரை இயக்கும். இதனால் காரின் எரிபொருள் செலவு மிச்சமாகும்.
இது சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் டீசலுக்கு 28.09 கி.மீ. தூரம் ஓடியதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கெனிசி அயுகாவா கூறினார். நாட்டில் அறிமுகமாகியுள்ள கார்களில் அதிக எரிபொருள் சிக்கனம் மிக்க கார் இது என்று அவர் மேலும் கூறினார்.
சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லா வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்காக மத்திய அரசு ரூ. 795 கோடி சலுகையை 2020-ம் ஆண்டு வரை அளிக்க முடிவு செய்துள்ளது. அதைத் தொடர்ந்து மாருதி நிறுவனம் ஹைபிரிட் ரக காரை தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி ஹைபிரிட் கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் பஸ்களுக்கு சலுகை அளிக்கப்படும். இதன்படி குறைந்தபட்சம் ரூ. 1,800 முதல் ரூ.6.6 லட்சம் வரை சலுகை கிடைக்கும். கார்களுக்கு ரூ. 13 ஆயிரம் முதல் ரூ. 1.38 லட்சம் வரை சலுகை அளிக்கப்படும்.
ஹைபிரிட் பிரிவில் அறிமுகமாகியுள்ள சியாஸ் டீசல் காருக்கு 12.5 சதவீத உற்பத்தி வரி விலக்கு கிடைக்கும். வழக்கமாக விதிக்கப்படும் 24 சதவீத வரி இதற்குக் கிடையாது. மேலும் ஃபேம் திட்டத்தின் கீழ் ரூ. 13 ஆயிரம் சலுகையும் இந்தக் காருக்குக் கிடைக்கும்.
தற்போது சந்தையில் உள்ள டொயோடா பிரியுஸ் மற்றும் கேம்ரி ஹைபிரிட் ரக கார் களின் விலை ரூ.32 லட்சம் முதல் ரூ.39.80 லட்சம் வரை உள்ளது. இவை அனைத்தும் முழுமையான ஹைபிரிட் ரகக் கார்களாகும். சியாஸ் மாடல் கார் தயாரிப்புக்கு மாருதி நிறுவனம் ரூ. 620 கோடியை முதலீடு செய்துள்ளது. இதில் 99 சதவீதம் உள்நாட்டில் தயாரான பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சியாஸ் கார்கள் ஓரளவு ஹைபிரிட் தன்மையைக் கொண்டவை. அதிகம் விற்பனையாகும் மாடலில் இந்தத் தொழில் நுட்பத்தைப் புகுத்த திட்டமிட்டுள்ளதாக கெனிசி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT