Published : 04 Sep 2015 10:51 AM
Last Updated : 04 Sep 2015 10:51 AM
துருக்கியில் நடைபெற உள்ள ஜி-20 நாடுகளின் நிதி அமைச் சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியிலிருந்து புறப்பட்டார்.
செப்டம்பர் 4 மற்றும் 5-ம் தேதி துருக்கி தலைநகர் அங்காராவில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஜி-20 நாடு களின் நிதி அமைச்சர்கள் மற்றும் அந்தந்த நாடுகளின் மத்திய வங்கி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மத்திய அமைச்சருடன் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனும் துருக்கிக்கு பயணமாகியுள்ளார்.
மாநாடு நடைபெறும் அதே சமயம் பிற நாடுகளின் மத்திய வங்கித் தலைவர்களுடன் ரகுராம் ராஜன் ஆலோசனை நடத்த உள்ளார் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த மாநாட்டில் ஆர்ஜென் டீனா, பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் கலந்து கொள் கின்றனர்.
இந்த மாநாட்டின்போது ஜி 20 நாடுகளின் வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அதேசமயம் வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்தும் ஆராயப் படும். சர்வதேச நிதி நிர்வாகத்தில் உள்ள சிக்கல்கள், நிதி நிர்வாக சீரமைப்பு, சர்வதேச வரி விதிப்பு குறித்த பிரச்சினை மற்றும் தட்ப வெப்ப மாறுதல் குறித்தும் ஆராயப்படும்.
மாநாட்டுக்கு முன்னதாக ஜி20 நாடுகளின் தொழில்துறை அமைச்சர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது வேலை வாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயே இதில் பங்கேற்று வேலை வாய்ப்பு உருவாக்கம் தொடர்பான உத்திகளை வகுப்பது குறித்து உரை நிகழ்த்த உள்ளார்.
அத்துடன் வேலை வாய்ப்பில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைப் போக்கும் வகையிலான கொள் கைகளை வகுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் பேச உள்ளார். இதன் மூலம் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்ட முடியும் என்பதை வலி யுறுத்தி அவர் பேசுவார் என தெரிகிறது.
செப்டம்பர் 6-ம்தேதி மாலை இந்தியாவுக்கு திரும்பும் ஜேட்லி, செப்டம்பர் 7-ம் தேதி காலை டெல்லி வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT