Published : 22 Sep 2020 01:45 PM
Last Updated : 22 Sep 2020 01:45 PM
எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பொருட்களை வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தெரிவித்ததாவது:
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பொருட்களை வீட்டுக்கே வந்து விநியோகம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளன.
வாகனங்களில் வீடுகளுக்கு சென்று எரிபொருள் வழங்குவது அனுமதிக்கப்படவில்லை என்றும், குறிப்பிட்ட வர்த்தக வாடிக்கையாளர் தளங்களில் மட்டுமே விதிகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு இந்த வசதி அளிக்கப்படுவதாகவும் அவை தெரிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்ததை பயன்படுத்திக் கொண்டு, 16.71 மில்லியன் பீப்பாய் கச்சா எரிபொருளை இந்த வருடத்தின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியா வாங்கியது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முறையே 2010 ஜூன் 26 மற்றும் 2014 அக்டோபர் 19 முதல் சந்தை நிலவரங்களுக்கேற்ப நிர்ணயிக்கப்படும் என்று அரசு முடிவு செய்தது.
அது முதல், எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் சர்வதேச விலைகள் மற்றும் இதர விஷயங்களைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை நிர்ணயித்து வருகின்றன.
பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வுத் திட்டத்தின் கீழ், பிரதமரின் உஜ்வால் திட்ட பயனாளிகளுக்கு ஏப்ரல் முதல் மூன்று மாதங்களுக்கு இலவச எரிவாயு உருளைகள் வழங்க முடிவெடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 2020 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தங்களால் விநியோகிக்கப்படும் எரிவாயு உருளைகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை என்றும் இவை இறக்குமதி செய்யப்படுவது இல்லை என்றும் எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை ஏற்றத்தில் இருந்து நுகர்வோர்களை பாதுகாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT