Published : 18 Sep 2020 01:20 PM
Last Updated : 18 Sep 2020 01:20 PM
மத்திய அரசு பணியாளர் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம் ஏதும் செய்ய வாய்ப்பில்லை என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், கூறியதாவது:
கோவிட்-19-இன் போது ஓய்வூதியர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டது. சுமார் 20 இந்திய நகரங்களில் உள்ள ஓய்வூதியர்களுடன் இணையம் மூலமான உரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.
ஓய்வூதியர்களின் உடல் நலனை உறுதி செய்வதற்காக, யோகா பற்றிய இணைய நிகழ்ச்சி ஒன்றும் நடத்தப்பட்டது. கோவிட்-19 காலத்தில் ஓய்வூதியத்தை குறித்த நேரத்தில் வழங்குவதற்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
2003 டிசம்பர் 22-ஆம் தேதியிட்ட நிதி அமைச்சகத்தின் (பொருளாதார விவகாரங்கள் துறை) அறிவிப்பின் படி, மத்திய அரசு பணியாளர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக 2020 பிப்ரவரி 17 அன்று வெளியிட்ட உத்தரவுகளை மாற்றும் திட்டம் எதுவிமில்லை.
குடிமைப் பணிகளில் திறன் வளர்த்தலுக்கான தேசிய திட்டமான கர்மயோகி இயக்கம் ஆறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது: கொள்கை கட்டமைப்பு, நிறுவன கட்டமைப்பு, போட்டித்திறன் கட்டமைப்பு, டிஜிட்டல் கற்றல் கட்டமைப்பு, மின்னணு மனித வள மேம்பாட்டு திட்டம் மற்றும் கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் கட்டமைப்பு ஆகிய அம்சங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT