Published : 14 Sep 2020 06:58 AM
Last Updated : 14 Sep 2020 06:58 AM
சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறி பேக்கேஜிங்கில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அமேசான், பிளிப்கார்ட் போன்றவற்றுக்கு அபராதம் விதிக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து பாதிப்பின் அளவுக்கேற்ப அபராதம் வசூலிக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.
இதுதொடர்பாக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான வழிகாட்டு முறைகளை வகுக்குமாறு என்ஜிடி தலைவரான நீதிபதி ஏ.கே.கோயல் வெளியிட்ட தீர்ப்பில் கூறியுள்ளார்.
16 வயது சிறுவன் ஆதித்ய துபே இது தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள மிகப் பெரிய நிறுவனங்கள் அமேசான், பிளிப்கார்ட் ஆகியன தங்களது பொருட்களை பேக் செய்வதற்கு அதிகளவில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துகின்றன. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.
பிளாஸ்டிக் கழிவு மேலாண் விதி 2016-ன் கீழ் பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் அவற்றை அகற்ற வேண்டும். இதற்காக பொருட்களை டெலிவரி செய்து பேக்கிங்கில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களே வாங்கி அவற்றை அழிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இது அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கும் பொருந்தும் என துபே தாக்கல் செய்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை அக்டோபர் 14-ம் தேதி தாக்கல் செய்யுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT