தொழில் துறையினரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி

தொழில் துறையினரை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி தொழில் துறையினரை செவ்வாய்க்கிழமை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் நிகழும் பொருளாதார மாற்றங்கள் குறித்து தொழில்துறையினருடன் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.

தொழில் துறையினருடன் கடந்த இரண்டு மாதங்களில் மோடி நடத்தும் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் இதுவாகும்.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்குத் தயாராகி வருவது, சீன பொருளாதார சூழல் ஆகியன குறித்தும் தொழில்துறையினருடன் மோடி விவாதிப்பார் என்று தெரிகிறது. சமீபத்திய சர்வதேச பொருளாதார நிகழ்வுகள் இதனால் இந்தியாவுக்கு சாதக அம்சங்கள் என்பதுதான் மோடி-தொழில்துறையினர் சந்திப்பின் பிரதான தலைப்பாகும்.

இருந்தாலும் இந்தியத் தொழில் துறையைப் பாதிக்கும் பிற விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த ஜூன் 30ம் தேதி தொழில் துறையினரைச் சந்தித்த மோடி அப்போது அவர்கள் துறை சார்ந்த குறைகளைக் கேட்டறிந்தார்.

நில மசோதா கையகப்படுத்தும் அவசரச் சட்டம் காலாவதியாக அனுமதித்தது, சரக்கு சேவை வரி விதிப்பு மசோதா கிடப்பில் இருப்பது உள்ளிட்டவை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in