Published : 11 Sep 2020 05:38 PM
Last Updated : 11 Sep 2020 05:38 PM

50,000 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டம்

நாடுமுழுவதும் 50,000 கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக செயலாளர் கிரிதர் அராமனே தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரத்தின் திறனை உணர, தேசிய உள்கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தில் மிக முக்கியமானது சாலை மேம்பாடு. உள்கட்டமைப்பு மேம்பாடு திட்ட செலவில் 4ல் ஒரு பகுதிக்கும் மேல் சாலை மேம்பாட்டுக்கு செலவிடப்படுகிறது.

சாலைகள் விரிவாக்கம், நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்.
வளர்ச்சி திட்டங்களுக்கான முதலீகளை திரட்டுவற்கு, கட்டமைப்பு முதலீடு நிறுவனங்களை அமைக்க மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான நிதியை திரட்ட முடியும். தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூல் மிக அதிகமாக உள்ளது. இதனால், சாலை அமைக்கும் திட்டங்களில் சிறந்த முதலீட்டாளர்களை ஈர்க்க, சாலை மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இது தொடர்பாக டெல்லியில் நடந்த முன்னணி முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலாளர் கிரிதர் அராமனே, 50 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்க, தனது அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகவும், இவற்றில் பெரும்பாலானவை 4 வழி மற்றும் 6 வழி சாலைகள் எனவும் தெரிவித்தார். இதற்கான முதலீடுகளில், நெடுஞ்சாலை சொத்து அடிப்படையிலான, கட்டமைப்பு முதலீட்டு நிறுவனங்கள் கவனமாக தேர்வு செய்யப்படும் என அவர் கூறினார்.

புதிதாக அமைக்கப்படவுள்ள சாலைகளில் நீண்ட காலத்துக்கு சுங்க கட்டணம் வசூலிக்க முடியும் எனவும் கிரிதர் அராமனே தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x