ரிலையன்ஸின் சந்தை மதிப்பு 200 பில்லியன் டாலராக உயர்வு

ரிலையன்ஸின் சந்தை மதிப்பு 200 பில்லியன் டாலராக உயர்வு
Updated on
1 min read

இந்தியாவின் முன்னணி நிறுவனமாக உள்ள ரிலையன்ஸ் புதிதாக ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. சந்தை மதிப்பில் 200 பில்லியன் டாலரைக் கடக்கும் முதல் இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் உருவாகியுள்ளது.

நேற்றைய பங்கு வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்கு 6.2 சதவீதம் ஏற்றம் கண்டது. இதன்மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 200 பில்லியன் டாலரைக் கடந்துள்ளது.

ஆசியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரீடெய்ல் துறையில் இருந்து டெலிகாம் துறை வரை முன்னணி நிறுவனமாக உள்ளது. டெலிகாம் துறையில் நான்கு வருடங்களிலேயே மிகப்பெரிய வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பெற்றுள்ளது. தற்போதைய சூழலில் இந்திய சந்தையில் பல்துறையில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனமாக ரிலையன்ஸ் உள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தில் பல சர்வதேச நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. ரிலையன்ஸின் ரீடெய்ல் பிரிவில் அமேசான் நிறுவனம் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. மேலும் அமேசான் நிறுவனத்திடம் ரிலையன்ஸ் ரீடெய்லின் 40 சதவீத பங்கை விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரிலையன்ஸ் ரீடெய்ல் பிரிவுக்கு நாடு முழுவதும் 12 ஆயிரம் கடைகள் உள்ளன. சமீபத்தில் போட்டி நிறுவனமான ஃப்யூச்சர் குழுமத்தையும் கையகப்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in