Published : 31 Aug 2020 09:00 AM
Last Updated : 31 Aug 2020 09:00 AM

விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கை இந்த ஆண்டுக்குள் முடியும்: ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டம்

திருவனந்தபுரம் உள்ளிட்ட அறிவிக்கப்பட்ட விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டுக்குள் முடிவடையும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறினார்.

கடந்த ஆண்டு லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம், குவாஹட்டி ஆகிய விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது.

அதன்படி, இந்த 6 விமான நிலையங்களில் அகமதாபாத், லக்னோ, மங்களூரு ஆகிய 3 விமான நிலையங்களை பராமரிக்கும் ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றது. இந்த மாதத் தொடக்கத்தில் மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலை வழங்கியது.

விமான நிலைய பராமரிப்பு ஒப்பந்தத்தைப் பெறும் தனியார் நிறுவனங்கள் 40% பணியாட்களை நியமித்துக் கொள்ளும் 60% பணியாட்கள் இந்திய விமான நிலைய ஆணையத்தால் நியமிக்கப்படுவர்.

ஜெய்ப்பூர், குவாஹாட்டி விமான நிலையங்களை பராமரிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருக்கிறது. திருவனந்தபுர விமான நிலைய பராமரிப்பை தனியாருக்கு அளிப்பதில் மட்டும் கேரள ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இழுபறி நீடிக்கிறது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் திருவனந்தபுரம் விமானநிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், பிரதமர் மோடிக்கு 2-வது முறையாகக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி, மத்திய அரசின் முடிவை திரும்பப் பெறக்கோரி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் 20 முதல் 25 விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தநிலையில் தனியார் மயமாக்கும் முடிவு குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துதுறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:

‘‘தனியாருக்கு இடையே போட்டியைக் கொண்டுவந்தால்தான் விமாநிலையத்தை சிறப்பாகப் பராமரி்ப்பு என்பது சிறப்பாக மாறும். மக்கள் தலைசிறந்த, முதல்தரமான, தகுதிவாய்ந்த விமானநிலையத்தை எதிர்பார்க்கிறார்கள். ஏர் இந்தியாவுக்கு சொத்து மதிப்பு உள்ளபோதிலும் விமானத்தையும், விமான நிலையங்களையும் அரசு மட்டுமே நடத்தும் நடைமுறை சரியானது அல்ல.

எனவே தான் தனியார் பங்களிப்பை அரசு ஊக்குவிக்கிறது. அறிவிக்கப்பட்ட விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டுக்குள் முடிவடையும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x