அவசர கடன் உறுதித் திட்டம்; ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் உதவிகள்

அவசர கடன் உறுதித் திட்டம்; ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் உதவிகள்
Updated on
1 min read

நூறு சதவிகித அவசர கடன் உறுதித் திட்டத்தின் கீழ், பொது மற்றும் தனியார்துறை வங்கிகள், 2020 ஆகஸ்டு 18-ம் தேதி வரை ரூ.1.5 லட்சம் கோடி மதிப்புள்ள கடனுதவிகளை வழங்கியுள்ளன.

தகுதியுள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் விருப்பம் உள்ள முத்ரா கடனாளிகளுக்கு அவசரகாலக் கடனளிப்பு உத்தரவாதத் திட்டம் மூலம் ரூ.3 லட்சம் கோடி வரையில் கூடுதல் கடன் அளிக்க மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மேலும் இத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் விருப்பம் உள்ள முத்ரா கடனாளிகளுக்கு ரூ.3 லட்சம் கோடி வரையில் கூடுதல் கடனுக்கு தேசிய கடன் உத்தரவாத டிரஸ்டி கம்பெனி லிமிடெட் (NCGTC), உத்தரவாதம் அளிக்கப்பட்ட அவசரகாலக் கடனளிப்பு (GECL) ஏற்பாட்டின் மூலம், 100 சதவீத உத்தரவாதம் அளிக்கும்.

இதற்காக நடப்பு மற்றும் அடுத்த மூன்று நிதியாண்டுகளில் மத்திய அரசு ரூ.41,600 கோடி தொகுப்பு நிதி அளிக்கும்.

உத்தரவாதம் அளிக்கப்பட்ட அவசரகாலக் கடனளிப்பு (GECL) ஏற்பாட்டின் மூலம் அளிக்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும் என அமைச்சரவை அனுமதி அளித்தது. திட்டம் அறிவிக்கப்படும் தேதியில் இருந்து 31.10.2020 வரையிலான காலம் வரை அல்லது GECL கீழ் ரூ.3 லட்சம் கோடி அனுமதி அளிக்கப்படுவது வரை, இதில் எது முன்னதாக வருகிறதோ அந்த காலக்கட்டத்துக்கு இது பொருந்தும்.

கோவிட்-19 நோய்த் தாக்குதல் மற்றும் முடக்கநிலை அமல் காரணமாக குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் உற்பத்தி மற்றும் இதர செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு அவசரகாலக் கடனளிப்பு உத்தரவாதத் திட்டம் (ECLGS) உருவாக்கப்பட்டது.

திட்டமிடப்பட்ட 3 லட்சம் கோடி ரூபாயில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கான கடனுதவிகள் ஏற்கெனவே பட்டுவாடா செய்யப்பட்டு விட்டன. தற்சார்பு இந்தியா தொகுப்பின் கீழ், மத்திய அரசு அவசர கடன் உறுதித் திட்டத்தை அறிவித்தது.

பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் அளித்துள்ள மொத்த கடன் உதவி விவரங்கள்:

இந்தத் திட்டத்தின் கீழ், பொதுத்துறை வங்கிகள், ரூ.76,044.44 கோடி கடனுதவியை அளித்துள்ளன. இதில் ரூ.56,483.41 கோடி ஏற்கனவே பட்டுவாடா செய்யப்பட்டு விட்டது. தனியார் துறை வங்கிகள் அளித்துள்ள ரூ.74,715.02 கோடி கடனுதவியில், ரூ.45,762.36 கோடி கடனுதவி அளிக்கப்பட்டு விட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in