Published : 19 Aug 2020 04:04 PM
Last Updated : 19 Aug 2020 04:04 PM

தெருவோர வியாபாரிகளுக்கு கடனுதவி திட்டம்: 125 நகரங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை

தெரு வியாபாரிகளின் பணி மூலதனத் தேவைகளுக்காக மத்திய அரசு அறிவித்த பிரதமர் ஸ்வநிதித் திட்டம் குறித்து
நாடுமுழுவதும் 125 நகரங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆலோசனை நடத்தினார்.

மத்திய வீட்டுவசதி நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், தீனதயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ((DAY-NULM) திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற வியாபாரிகளுக்கு ஆதரவு (Support to Urban Street Vendors - SUSV) தொகுப்புத் திட்டம் மூலமாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் (Urban Local Bodies - ULBs) விற்பனைக்கு சாதகமான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான அம்சம் உள்ளது.

தெரு வியாபாரிகளுக்கான சட்டம் 2014, மே 2014 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி வியாபாரிகளின் வாழ்வாதார உரிமைகள் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு ஆகியவை அளிக்கப்படுகின்றன. இச்சட்டம் நகர்ப்புற வியாபாரிகளின் விதிமுறைகள் குறித்தும் எடுத்துக் கூறுகிறது.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கத்தை அடுத்து, தெரு வியாபாரிகளின் வாழ்க்கையும், வாழ்வாதாரமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தெரு வியாபாரிகளின் பணி மூலதனத் தேவைகளுக்காக, அரசு பிரதமர் ஸ்வநிதித் திட்டத்தை 1 ஜூன் 2020 அன்று அறிமுகப்படுத்தியது..

இத்திட்டத்தின் கீழ், தெரு வியாபாரிகள் ஓராண்டு காலக் கடனாகப் பத்தாயிரம் ரூபாய் வரை பிணையில்லா பணி மூலதனக் கடன் பெறலாம். பிரதமர் ஸ்வநிதித் திட்டம் குறித்து பரிசீலிப்பதற்காக, மாநிலங்களின் வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர்கள்; தலைமைச் செயலர்கள்; மாநில முதன்மைச் செயலர்கள்; காவல்துறை தலைமை இயக்குநர்கள்; முனிசிபல் ஆணையர்கள்; மாவட்ட ஆட்சியர்கள்; மாவட்ட மாஜிஸ்திரேட்டுகள்; இதர பங்குதாரர்கள் ஆகியோருடன் வீட்டு வசதி நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஹர்தீப் சிங் பூரி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து இன்று நாடுமுழுவதும் 125 நகரங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தெரு வியாபாரிகள் குறித்து, அவர்கள் அனைவரும் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் அனைவருக்கும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பிரதமர் ஸ்வநிதித் திட்ட விண்ணப்பத்தாரர்களின் தற்போதைய நிலை குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x