Published : 18 Aug 2020 07:06 AM
Last Updated : 18 Aug 2020 07:06 AM

வர்த்தக போரால் சீனாவில் இருந்து வெளியேறிய 24 நிறுவனங்கள் இந்தியாவில் உற்பத்தி

சீனாவில் இருந்து வெளியேறிய 24 நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி நிலையத்தை இந்தியாவில் நிறுவ முடிவு செய்துள்ளன.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாகவும், அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் காரணமாகவும் பல முன்னணி நிறுவனங்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களின் தொழில் வர்த்தக சங்கிலியை மறுகட்டமைக்க நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. குறிப்பாக சீனாவில் இருந்து பல நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன. இப்படி வெளியேறும் 24 நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் உற்பத்தியைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளன.

இவை பெரும்பாலும் எலெக்ட்ரானிக், மொபைல் சார்ந்த நிறுவனங்களாக உள்ளன. மேலும் இவை சாம்சங், ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு அசெம்ப்ளிங் செய்து வரும் நிறுவனங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்கள் 1.5 பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிறுவனங்கள் உற்பத்தி நிலையத்தை அமைப்பதில் வியட்நாம், கம்போடியா, மியான்மர், வங்கதேசம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியா பின் தங்கியிருக்கிறது. ஆனாலும், தற்போது இந்தியாவில் இந்த நிறுவனங்கள் உற்பத்தி நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ள இந்திய அரசு, இந்த நிறுவனங்கள் 153 பில்லியன் மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்யலாம் எனவும் எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளது. இதன்மூலம் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த மார் மாதம் அரசு உற்பத்தி சார் ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்தது. பெரிய எலெக்ரானிக் நிறுவனங்கள் தங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தவும், மொபைல் உற்பத்தியில் அதிகபட்ச முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் இந்தத் திட்டம் வழிவகை செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகும் பொருட்களின் மொத்த விற்பனையில் 6 சதவீதம் அந்தந்த நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்படும். தற்போது எலெக்ட்ரானிக் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் பின்னர் பார்மா, ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல், உணவுப் பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய அறிக்கைகளின்படி, ஆப்பிள் தனது உற்பத்தி பிரிவை இந்தியாவில் விரிவுபடுத்த உள்ளது. அதன் அசெம்ப்ளிங் பார்ட்னர் நிறுவனமான ஃபாக்ஸ்கான் இந்தியாவில் ஒரு பில்லியன் டாலர் முதலீடு செய்வதாகக் கூறியுள்ளது. இது சென்னையில் உள்ள உற்பத்தி நிலையத்தில் அடுத்த மூன்றாண்டுகளில் முதலீடு செய்யும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x