Published : 13 Aug 2020 01:26 PM
Last Updated : 13 Aug 2020 01:26 PM

வருமான வரி செலுத்துவோருக்கு அதிகாரம்; புதிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ஆன்லைன் மூலமாகவே அனைத்து கணக்குகளையும் செலுத்தி, வரி செலுத்துவோருக்கு அதிகாரமளிக்கும் ‘ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு - நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

கடந்த ஆண்டுகளில் நேரடி வரிவிதிப்புக்கான மத்திய வாரியம், (சிபிடிடிநேரடி வரிவிதிப்பில் பல முக்கியமான வரிவிதிப்பு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வந்துள்ளது.

கடந்த ஆண்டு நிறுவன வரி விகிதங்கள் 30 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டதோடு, புதிய உற்பத்தி தொழிற்பிரிவுகளுக்கான வரி விகிதங்கள் 15 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு உள்ளன. ஈவுத்தொகையைப் பகிர்ந்து அளிப்பதன் மீது விதிக்கப்படும் வரி நீக்கப்பட்டு உள்ளது.

வரிவிதிப்பில் சீர்திருத்தம் என்பது வரிவிகிதங்களைக் குறைத்தல் மற்றும் நேரடி வரிவிதிப்பு சட்டங்களை எளிமைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. வருமான வரித்துறை செயல்பாட்டில், திறனையும், வெளிப்படைத் தன்மையையும் கொண்டு வருவதற்கு சிபிடிடி பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்துள்ளது.

புதியதாக அறிமுகப்படுத்தி உள்ள ஆவண அடையாள எண் மூலமாக அலுவலகத் தொடர்பியலை மேலும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்வது என்பதும் இந்த சீர்திருத்தத்தில் உள்ளடங்கும். அதாவது இனி ஒவ்வொரு துறை சார்ந்த தொடர்பு நடவடிக்கையிலும், கணினி மூலம் உருவாக்கப்படும் பிரத்யேக ஆவண அடையாள எண் குறிப்பிடப்படும்.

மேலும், வரி செலுத்துவோருக்கு வரி செலுத்தும் நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், வருமான வரித்துறையானது வரி செலுத்தும் தனி நபர்கள் வசதியாக வருமானவரி தாக்கல் படிவங்களை முன்கூட்டியே நிரப்பித் தரும் நடவடிக்கையை எடுத்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஏற்று நடக்க வேண்டிய வரிவிதிப்பு விதிகளும் எளிமையாக்கப்பட்டு உள்ளன.

நிலுவையில் உள்ள வரிப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதைக் கருத்தில் கொண்டு வருமானவரித் துறை ”விவாத் செ விஷ்வாஸ் சட்டம் 2020” என்ற நேரடி வரி விதிப்பு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் தற்போது பிரச்சனைகளை பைசல் செய்வதற்கான சுயபிரகடனங்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

வரி செலுத்துவோரின் குறைகள், புகார்களைத் திறம்பட குறைப்பதற்காக, பல்வேறு மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் துறைசார் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான நிதி வரம்பு உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும், டிஜிட்டல் பணப்பரிமாற்றம் மற்றும் மின்னணு முறையில் பணம் செலுத்துதல் ஆகியவற்றை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

அதன் அடிப்படையில், நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க ‘ஒளிவுமறைவற்ற வரிவிதிப்பு - நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ஆன்லைன் மூலமாகவே அனைத்து கணக்குகளையும் செலுத்தி, வரி செலுத்துவோருக்கு அதிகாரமளிக்கும் வகையில் இந்த திட்டம் இருக்கும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிர்மலா சீதாராமன் பேசுகையில் ‘‘புதிய திட்டம் வெளிப்படைத்தன்மை உள்ளதாக இருக்கும்.ஆன்லைன் மூலமாகவே அனைத்து கணக்குகளையும் செலுத்தலாம் வரி செலுத்துவோருக்கு அதிகாரமளித்தல், வெளிப்படையான அமைப்பை உருவாக்குதல், நேர்மையாக வரி செலுத்துவோரை கெளரவிப்பதே பிரதமரின் கொள்கையாக இருக்கும்..’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வர்த்தக சபைகள், வர்த்தகக் கழகங்கள், சார்ட்டர்டு அக்கவுண்ட்டுகளின் சங்கங்கள் மற்றும் முக்கியமான வரி செலுத்துவோர் மற்றும் வருமான வரித் துறையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x